ஜேஎன்யூ தாக்குதல்.. ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவால் திருப்பம்.. ஏபிவிபியின் உறுப்பினருக்கு போலீஸ் வலை!
ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவராக கருதப்படும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அக்சாத் அவாஸ்தி போலீசால் தேடப்பட்டு வருகிறார்.
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவராக கருதப்படும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அக்சாத் அவாஸ்தி போலீசால் தேடப்பட்டு வருகிறார். போலீஸ் இவரை விசாரணைக்கு அழைத்தும், இவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் கடந்த வாரம் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. நிறைய வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது.
ஜேஎன்யூவில் இடதுசாரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தற்போது இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. நேற்று முதல்நாள், ஜேஎன்யூவில் மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான வீடியோ ஆதாரங்களை இந்திய டுடே வெளியிட்டது.
யார் பேசினார்
ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் ஒருவர் நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்று இந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் ஒப்புக்கொண்டுள்ளார். ஏபிவிபி அமைப்பை சேர்ந்த முதலாம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் அக்சாத் அவாஸ்தி இதில் முக்கியமானவர். இவர்தான் அந்த தாக்குதல் சம்பவம் குறித்து முழுவதுமாக வீடியோவில் விளக்கினார்.
என்ன விளக்கம்
தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டது, ஆயுதங்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து இவர் விவரங்களை வெளியிட்டார். நாங்கள் எங்கள் ஊரில் இது போல கலவரம் செய்து இருக்கிறோம். அந்த அனுபவம் இருக்கிறது. இங்கு ஏபிவிபியில் சேர்ந்த பின் திட்டமிட்டு இடதுசாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம் என்று குறிப்பிட்டார்.
அக்சாத் அவாஸ்தி வீடியோ
அக்சாத் அவாஸ்தி இப்படி சொல்லும் வீடியோ ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பெறப்பட்டு, வெளியிடப்பட்டது. இந்தியா டுடேவில் நேற்று முதல்நாள் இரவு நிகழ்ச்சியில் இதற்கான ஆதாரங்கள் வெளியிட்டப்பட்டது. இந்த விஷயத்தில் முதலில் டெல்லி போலீஸ் இடதுசாரி மாணவர்கள் மீது புகார் வைத்தது. ஆனால் இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் காரணமாக ஏபிவிபி மீது போலீஸ் தனது கவனத்தை திருப்பி உள்ளது.
என்ன அழைப்பு
இதையடுத்து அக்சாத் அவாஸ்தியை விசாரிக்க டெல்லி போலீஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் அக்சாத் அவாஸ்தி இரண்டு முறை அழைத்தும் டெல்லி போலீசை சந்திக்கவில்லை. இன்று காலை அவரை விசாரிக்க போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அக்சாத் அவாஸ்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை.
எங்கே இருக்கிறார்
இவருடன் ரோஹித் ஷா என்ற ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் டெல்லி போலீசை சென்று சந்திக்கவில்லை. இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அக்சாத் அவாஸ்தி பெரும்பாலும் தலைமறைவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
யார் இவர்
அக்சாத் அவாஸ்தி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர். இவர் ஜேஎன்யூவில் முதலாம் ஆண்டு பிரென்ச் படிக்கிறார். இவர் ஏபிவிபி கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.