இருளில் மூழ்கிய ஜேஎன்யு! பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள் மீது கல்வீச்சு! பரபர
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் திரையிடத் திட்டமிட்டிருந்த நிலையில், திரையிடலுக்குச் சற்று நேரம் முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மொபைல் மூலம் ஆவணப்படத்தைப் பார்த்த நிலையில், அங்குக் கல்வீச்சு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2003இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு அங்கு மாநிலம் முழுக்க பெரிய கலவரம் ஏற்பட்டது. குஜராத்தையே உலுக்கிய இந்த கலவரம் முழுமையாகக் கட்டுக்குள் வரவே கூட சில நாட்கள் வரை ஆனது.
அதிகாரப்பூர்வமாகவே இந்த கலவரத்தில் சுமார் 1000 கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கலவரம் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டிருந்தது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை! ரூ.5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு!
பிபிசி ஆவணப்படம்
மொத்தம் இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் வெளியாக உள்ளது. அதில் முதல் பாகம் கடந்த வாரம் வெளியான நிலையில், இன்று இரண்டாம் பாகம் வெளியாகிறது. இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்குத் தொடர்பு உள்ளதைப் போல சில கருத்துகள் இருப்பதாக பாஜகவின் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சர்வதேச ஊடகமான பிபிசி பொய்யான கருத்துகளைப் பரப்புவதாகவும் இந்த ஆவணப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
இருப்பினும், நீண்ட கள ஆய்வுக்குப் பின்னரே இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளதாக பிபிசி தரப்பில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவ அமைப்பினர் இந்த ஆவணப்படத்தைத் திரையிட உள்ளதாக அறிவித்தனர். இருப்பினும், இந்த ஆவணப்படத்தைத் திரையிட வேண்டாம் என்றும் இதனால் வளாகத்தில் அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருந்தார்.
மின்சாரம் துண்டிப்பு
இருந்த போதிலும், மாணவ அமைப்பினர் இந்த பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யுவில் இன்று திட்டமிட்டபடி திரையிட முடிவு செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் இன்று மாலை திரையிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அங்குள்ள மாணவர் சங்க அலுவலகத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் இரவு 9 மணிக்குத் திரையிடத் திட்டமிட்டனர்.
ஜேஎன்யு நிர்வாகம்
ஜேஎன்யு நிர்வாகம் இந்த ஆணவப்படத்தை திரையிட அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமின்றி ஆவணப்படத்தைத் திரையிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இருந்த போதிலும், ஆவணப்படத்தைத் திரையிடுவது பல்கலைக்கழகத்தின் எந்த விதியையும் மீறாது என்றும் மத நல்லிணக்கத்தைக் கெடுக்காது என்றும் மாணவர்கள் தரப்பில் கூறினர். மேலும், திட்டமிட்டபடி ஆவணப்படத்தைத் திரையிடுவோம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
மாணவ அமைப்பு
இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரையிடலுக்குச் சற்று நேரம் முன்பு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குக் குழப்பமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும், ஆவணப்படத்தின் லிங்கை மாணவர்களுக்குப் பகிர்ந்துள்ளதாகவும் அனைவரும் அதை டவுன்லோட் செய்து ஒன்றாகப் பார்ப்போம் என்றும் மாணவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். க்யூஆர் கோட் மூலம் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று மாணவர்கள் நிச்சயம் ஆவணப்படத்தைப் பார்ப்பார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் ஆயிஷி கோஷ் தெரிவித்தார்.
கல்வீச்சு
இதையடுத்து மாணவர்கள் அனைவரும் இருளிலும் தங்கள் மொபைலில் இந்த ஆவணப்படத்தைப் பார்த்தார்கள். இதற்கான க்யூஆர் கோட் மாணவர்கள் மத்தியில் ஷேர் செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்தி, பல மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்தனர். மேலும், சிலர் தங்கள் லேப்டாப்பிலும் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில், அங்குக் கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி செங்கல் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.