டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு!
Recommended Video
டெல்லி: எப்போதும் இல்லாத அளவுக்கு 300% விடுதி மற்றும் கல்வி கட்டண உயர்வால் இனி படிக்கவே முடியாத நிலை உருவாகும் என்கிற அச்சத்தால் டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் எத்தனையோ துறைசார் அறிஞர்களை தேசத்துக்குக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மக்களுக்காக குரல் எழுப்பவும் சிந்திக்கவும் கூடிய மகத்தான மனிதர்களை தந்திருக்கிறது.
சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய குடும்பங்களின் மாணவர்களும் உதவித் தொகை உள்ளிட்டவைகளுடன் ஜே.என்.யூவில் படித்து வல்லுநர்களாகி இருக்கின்றனர். இந்நிலையில்தான் தங்களது கல்வி மற்றும் விடுதி கட்டணங்களின் அபரிதமான உயர்வு, உடை கட்டுப்பாடு, போராடும் மாணவர்களுக்கான அபராத தொகை உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி இன்று காலை முதல் டெல்லியில் போராடி வருகின்றனர் மாணவர்கள்.
அதுவும் விடுதி, கல்வி கட்டணம் 300% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏறத்தாழ 40% மாணவர்கள் கல்வியை தொடரவே முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பின்தங்கிய குடும்ப மாணவர்கள் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து முறையிட முயன்றனர்.
ஆனால் அந்த மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் மாணவர்கள் குதித்தனர்.
இப்போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசாரும் சி.ஆர்.பி.எப். படையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஒருகட்டத்தில் தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர். ஆனாலும் தங்களது எதிர்காலத்துக்கானது என்பதால் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் டெல்லி போலீசார் எப்படி கட்டுப்படுத்துவது என திணறி வருகின்றனர்.
போராட்டத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
மாணவர்கள் வாயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. விழா முடிந்த பின்னரும் சில மணிநேரங்கள் அமைச்சர் பொக்ரியால் பல்கலைக் கழகத்துக்குள்ளேயே காத்திருக்க நேரிட்டது. மாணவர்களை பெரும் முயற்சிக்குப் பின் அப்புறப்படுத்தி அமைச்சர் பொக்ரியாலை போலீசார் அனுப்பி வைத்தனர்.