நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல ஜேஎன்யூ மாணவர்கள் முயற்சி- சாலையில் அமர்ந்து 6 மணிநேரம் போராட்டம்
Recommended Video
டெல்லி: விடுதி கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தங்களை போலீசார் தடுத்து நிறுத்திய சாலையிலேயே அமர்ந்து 6 மணிநேரத்துக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜே.என்.யூ. பல்கலைக் கழக விடுதி கட்டணங்கள் 300% உயர்த்தப்பட்டது. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர் அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜே.என்.யூ. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து சாலைகளில் போராட்டத்தை மாணவர்கள் நடத்தியதால் தெற்கு டெல்லி போர்க்களமானது.
இதன்பின்னர் பல்கலைக் கழக வளாகத்துக்குள் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கட்டண உயர்வில் 50% குறைக்கப்படுவதாக ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் இதனை மாணவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்களை தொடர்ந்தனர்.
#WATCH: Jawaharlal Nehru University (JNU) students protest near Safdarjung Tomb after their march to Parliament was stopped by Police. They are demanding complete fee roll back along with other demands. pic.twitter.com/qstFa3G5SN
— ANI (@ANI) November 18, 2019
இந்நிலையில் இன்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த மாணவர்கள் திட்டமிட்டனர். இதனையடுத்து ஜே.என்.யூ. அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
மாணவர்களது பேரணியை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளையும் அமைத்தனர். மேலும் 144 தடை உத்தரவும் அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும் மாணவர்கள் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் நோக்கி 144 தடை உத்தரவையும் மீறி பேரணியை தொடங்கினர். பின்னர் சிறிது தொலைவில் அனைத்து மாணவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் தடுத்த இடத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமர்ந்து 6 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் ஜேஎன்யூ நிர்வாகத்துக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
மத்திய அரசு நடவடிக்கை
இதனிடையே ஜே.என்.யூ. மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மூவர் குழு ஒன்றை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இக்குழுவில் யூஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ். சவுகாண், ஏஐசிடிஇ அனில் சகஸ்ரபுதே, யூஜிசி செயலாளர் பேராசிரியர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.