ஜே.என்.யூ. வன்முறைக்கு காரணமே 4 இடதுசாரி அமைப்புகள்தான்: டெல்லி போலீஸ்
டெல்லி: ஜே.என்.யூ. வன்முறைகளுக்கு காரணமே 4 இடதுசாரி மாணவர் அமைப்புகள்தான் என்று டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜே.என்.யூ. வன்முறைகள் தொடர்பாக டெல்லி டிசிபி ஜாய் திர்கே இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜே.என்.யூ. வளாகத்தில் சிசிடிவி காட்சிகள் கிடைக்கவில்லை. சிசிடிவி கேமராக்களுக்கான சர்வர் அறை முதல் நாள் சூறையாடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்ட வைரல் வீடியோக்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சிலரை அடையாளம் கண்டிருக்கிறோம். ஜே.என்.யூ. வன்முறைகளுக்கு காரணம் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயிஷி கோஷ், முதுகலை மாணவர் விகாஸ் பட்டேல், பங்கஜ் மிஸ்ரா, முன்னாள் மாணவர் சுன்சூன் குமார், பிஎச்டி மாணவர் யோகேந்திர பரத்வாஜ், டோலன் சமந்தா, சுசீதா டலுக்டர், பிரியா ரஞ்சன், வாஸ்கர் விஜய் ஆகியோர்தான்.
Dr. Joy Tirkey, DCP/Crime, Delhi Police on #JNUViolence: No suspect has been detained till now, but we will begin to interrogate the suspects soon. pic.twitter.com/WtpqVvx1nb
— ANI (@ANI) January 10, 2020
ஜனவரி 1 முதல் 5-ந் தேதி ஜே.என்.யூ. மாணவர்களை ஆன்லைனில் பதிவு செய்ய நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் எஸ்.எப்.ஐ. ஏ.ஐ.எஸ்.எப், ஏ.ஐ.எஸ்.ஏ, டிஎஸ்எப் ஆகிய அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்கிறது. இவ்வாறு ஜாய் திர்கே கூறினார். மேலும் வன்முறையில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் படங்களையும் அவர் வெளியிட்டார்.
ஆயிஷ் கோஷ் மறுப்பு
ஆனால் தம் மீதான டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டுகளை ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயிஷ் கோஷ் மறுத்துள்ளார். மேலும், போலீசார் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள படத்தில் இருப்பது நான் இல்லை. என்னை தாக்கியவர்கள் யார் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றும் ஆயிஷ் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட மாணவர் சங்கப் பிரதிநிதிகளை மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சக செயலாளர் அமித் கரே இன்று சந்தித்து பேசினார்.