எல்லை தொடர்பான கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறுவதை தடுப்போம்: இந்தியா- சீனா கூட்டறிக்கை
டெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
லடாக் பதற்றம்: இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தை
எல்லையில் 7-வது கட்ட பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகளிடையே 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 7-வது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று இந்தியாவின் சூசுல் பகுதியில் நடைபெற்றது.
இருநாடுகள் கூட்டறிக்கை
இருநாடுகளிடையேயான ராணுவ கமாண்டர்கள் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பு சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
மோதல் தவிர்ப்பு
இதில், 7-ம் கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. இருநாடுகளும் எல்லைகள் தொடர்பான நிலைப்பாடுகளை புரிந்து கொள்ளவும் உதவியது. இருநாடுகளிடையே கருத்து வேறுபாடுகளை மோதல்களாக மாறும் சூழ்நிலையை தவிர்க்கவும் முடிவு செய்யபட்டது.
தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்
அடுத்தடுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இருதரப்பும் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் படைகுவிப்பை சீனா திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.