பாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்!
டெல்லி: பாஜக செயல் தலைவராக மூத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைவராக உள்ள அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகியுள்ளார். இதனால் தலைவர் பதவிக்கு வேறு யாரேனும் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அமித் ஷாவே தலைவர் பதவியில் தொடர்கிறார்.
இந்த நிலையில் தற்போது பாஜகவின் செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
அமித் ஷாவின் பணிகளை பகிர்ந்து கொண்டு அவருக்கு உதவியாக நட்டா செயல்படவுள்ளார்.6 மாத காலத்திற்கு ஜேபி நட்டா, பாஜக செயல் தலைவராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேபி நட்டா முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆவார்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நட்டா. மிகவும் அமைதியாக செயல்படக் கூடியவர். கடந்த 2014ம் ஆண்டே இவர் பாஜகவின் தலைவராகியிருக்க வேண்டியவர். ஆனால் அமித் ஷா அப்பதவிக்கு வந்து விட்டார்.
2010ம் ஆண்டு தேசிய அரசியலுக்கு நட்டாவைக் கொண்டு வந்தவர் நிதின் கட்காரிதான். மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்த நட்டா தற்போது செயல் தலைவராக மாறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் காரரான நட்டா, நிர்வாகத் திறமை கொண்டவர். ஏபிவிபி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நட்டா, 2010ம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராஜ்யசபாவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.