ஓய்வு பெற்றார் நீதிபதி அருண் மிஸ்ரா... தைரியத்தின் கலங்கரை விளக்கமே... பாப்டே புகழாரம்!!
டெல்லி: நீதிமன்ற பெஞ்சில் இருந்து பார் அசோசியேஷன் வரை, நீதிமன்ற கண்காணிப்பாளர்கள் என்று எங்கும் எப்போதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா. இன்று பணி ஓய்வு பெற்றார். ஆறு ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அருண் மிஸ்ரா, இன்று முதன் முறையாக தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2014ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்றவர் அருண் மிஸ்ரா. இவர் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்கவை.
உச்சநீதிமன்றத்தில் 540 அமர்வுகளில் பங்கெடுத்துள்ளார். 132 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். முக்கியமானவையாக இவை கருதப்படுகின்றன:
- 2002, குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தொடர்ந்த வழக்கு
- சி.பி.ஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட வழக்கு
- அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசின் பெரும்பான்மை நிரூபிக்க கோரிய வழக்கு
- மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு
- முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு
- லாலு பிரசாத் யாதாவிற்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு
- குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கு
- சஹாரா மற்றும் பிர்லா நிறுவன ஊழல் டைரி வழக்கு
- நீதிபதி லோயா மரண வழக்கு ஆகியவை முக்கிய வழக்குகளாக கருதப்படுகின்றன.
இன்று ஓய்வு பெற்று இருக்கும் இவருக்கு நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையில் பிரிவுபச்சார விழா நடந்தது. விழாவில் பேசிய பாப்டே, ''நீதிபதி மிஸ்ராவின் துணிவை பாராட்டுகிறேன். பல்வேறு இக்கட்டான சூழலில் துன்பங்களுக்கு இடையே தனது கடமையை சரியாக நிறைவேற்றியவர். உங்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பெற்றிருந்தது எனது பாக்கியம். மற்ற அனுபவசாலிகளைப் போல் இல்லாமல், இன்றுதான் முதன் முறையாக அவருடன் நான் அமர்ந்து இருக்கிறேன். இதுதான் இறுதியானதும் கூட.
Tamil Nadu: அரசு பணியில்...பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு... மீண்டும் நோ சொன்ன உச்ச நீதிமன்றம்!!
தைரியத்தின் கலங்கரை விளக்கம் மற்றும் துணிச்சலுக்கான ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்து இருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கும் இடையே உங்களது கடமையை திறமையாக வெளிப்படுத்தி இருக்கறீர்கள்'' என்று புகழாரம் சூட்டினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி மற்றும் தனது சக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து மிஸ்ரா பேசுகையில், ''எனது பணிக் காலத்தில் நான் சூப்பர் பவர் பெற்று இருந்தேன். ஒரு வழக்கில் கூட எனது மனச்சாட்சிக்கு எதிராக தீர்ப்பு அளித்தது இல்லை. பல்வேறு வழக்குகளில் எனது சகோதரர்களிடம் இருந்து நான் வேறுபட்டு இருக்கிறேன். தீர்ப்புகள் பற்றிய நியாயமான விமர்சனம் எப்போதும் வரவேற்கத்தக்கது, ஆனால் ஒருபோதும் அவற்றுக்கு வண்ணம் கொடுக்கக்கூடாது.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலரிடம் நான் கடுமையாக நடந்து கொண்டுள்ளேன். யாராவது மனதை நான் புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். மன்னிக்கவும், மன்னிக்கவும்'' என்றார்.