கனிமொழிக்கு திஹார்.. லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை.. மிரள வைத்த ஷைனி.. ஓய்வு பெற்றார்!
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓபி ஷைனி ஓய்வு பெற்றார்
டெல்லி: அன்று கனிமொழிக்கு ஜாமீன் இல்லை என்று சொன்னவர்.. பின்னர் கனிமொழி, ஆ.ராசாவை அதே 2ஜி வழக்கில் விடுதலை செய்தவர்.. செங்கோட்டையை தாக்கிய தீவிரவாதிக்கு மரண தண்டனை விதித்தவர்.. இத்தனை அதிரடி தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி ஓபி ஷைனி பதவி ஓய்வு பெற்றுள்ளார்!
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின்போது அடிக்கடி உச்சரித்த பெயர்தான் ஷைனி! கடந்த 2012ம் ஆண்டின் துவக்கத்தின் 2ஜி விவகாரத்தில் உரிமம் வழங்கியதில் ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றஞ்சாட்டியும், சுப்ரீம் கோர்ட் இதனை தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து மேல்முறையீடு செய்யவும், அதற்காக ஒரு ஸ்பெஷல் பெஞ்சை நியமித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஸ்பெஷல் பெஞ்ச் நீதிபதி ஷைனி தலைமையில் அமைக்கப்பட்டது. ஷைனி இதனை விசாரிக்கும்போதுதான், வழக்கும், விசாரணையும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
போலீஸ்காரர்
இவர் நீதிபதி என்றாலும் ஆரம்ப காலத்தில் ஒரு போலீஸ்காரர் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். படிப்படியாக தன் துறையில் உயர்ந்தார். 57 வயசில் ரிடையர் ஆனதும், அதற்கு பிறகுதான் நீதிபதி ஆனார். அதுகூட அவ்வளவு சுலபம் இல்லை.
கஷ்டமான தேர்வு
விடாமல் போராடினார். கிட்டத்தட்ட 6 வருட போராட்டம் அது. 1991-ம் ஆண்டு நடைபெற்ற `Judicial services' தேர்வு கூட கடினமானதுதான். இவருடன் சேர்ந்து எழுதியவர்களில், ஷைனி மட்டும்தான் தேர்வானவர். இதற்கு பிறகு தான் நீதிபதியாக பதவி பெற்று, காமன்வெல்த் விளையாட்டுக்கள் உள்ளிட்ட வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார்.
சமரசம் இல்லை
ஷைனி மிகவும் கண்டிப்பானவர். எந்தவித காம்ப்ரமைஸும் இவரிடம் எடுபடாது. அரசு அதிகாரிகளானாலும் சரி, தனியார் நிறுவன அதிகாரிகள் ஆனாலும் சரி.. குற்ற பின்னணி என்று வந்துவிட்டால் ஷைனி எந்த சமரசத்துக்கும் ஆளாக மாட்டார். வழக்குகளில் இவரது கடுமையை பலர் பாராட்டவும் செய்தனர். ஆனால், 2ஜிதான் இவரை உச்சத்துக்கு கொண்டு போனது. திகாரில் கனிமொழி இருந்தபோது, முதன்முதலில் ஜாமீன் தர முடியாது என்று சொன்னது சாட்சாத் ஷைனியேதான்.
சிபிஐ
ஆனால், இந்த வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாக சொல்லி, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியதும் ஷைனியேதான். அது மட்டுமில்லை.. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கையும் இவர்தான் கையாண்டார். வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறனையும் விடுவித்தது ஷைனிதான்.
மரண தண்டனை
ஷைனியின் விடுதலை தீர்ப்புகள் என்று ஒருபக்கம் இவைகளை எடுத்து கொண்டாலும், தண்டனை தீர்ப்பு என்று ஒரு லிஸ்ட் உள்ளது. குறிப்பாக 2000-ல் டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி மொஹம்மது ஆரிஃபுக்கு மரணதண்டனை விதித்தார் ஷைனி. இந்தத் தீர்ப்புதான் ஷைனியை தேசிய அளவில் திரும்பி பார்க்க வைத்து.
பாதுகாப்பு
ஒரு தீவிரவாதிக்கு மரண தண்டனை தருவது என்பது மிகப்பெரிய துணிச்சலான காரியம். இதற்காக தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அவருக்கு இருந்ததையும் நாடறிந்தது. அதனால்தான், இந்த தீர்ப்பையடுத்து, ஷைனிக்கு ஒய் பிரிவு மத்திய தொழில்படை பாதுகாப்புப் பிரிவு போலீஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மறக்க முடியாது
தவறு என்று தெரிந்துவிட்டால், அது யாராக இருந்தாலும், தனது தீர்ப்பினால் அதிரடியை காட்டும் நீதிபதியாக ஷைனி கடைசிவரை விளங்கினார். இந்த நிலையில், அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் நீதித்துறையில் ஷைனி வழங்கியுள்ள தீர்ப்புகளை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்.