அரசாங்கத்துடன் முரண்பட்டால் சிறையா?.. திஷா ரவி 'டூல்கிட்' வழக்கில் நீதிபதிகள் 'நச்' கமெண்ட்ஸ்
டெல்லி: டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் அளித்திருக்கும் நிலையில், விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம் சாட்டனர். குறிப்பாக, போராட்டத்தை எப்படி செயல்படவேண்டும் என்ற வழிமுறைகளை உள்ளடக்கிய டூல்கிட் மூலமாகவே வன்முறை வெடித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதேபோன்ற ஒரு டூல்கிட்டை பகிர்ந்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் ஆதரவு தெரிவித்திருந்தார். அந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி (22) சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றம் சாட்டி, அவர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டூல்கிட் வழக்கு.. சரமாரி கேள்விகள்.. நீதிபதிகளிடம் குட்டு வாங்கிய டெல்லி போலீஸ்
சரமாரி கேள்வி
இதையடுத்து, திஷா ரவியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே, திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம், டூல்கிட் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம், உண்மையில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் திஷாவை எப்படி தொடர்புப்படுத்தினீர்கள்? சதிக்கும், குற்றத்திற்கும் எங்கே தொடர்பு உள்ளது? எங்களுக்கு இன்னும் இதற்கு பதில் கிடைக்கவில்லை என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர்.
சிறையில் அடைக்க முடியாது
இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது, நீதிபதிகளின் தெரிவித்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது. அதில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 'டூல்கிட்'-ல் வன்முறைக்கான எந்தவொரு அழைப்பும் வெளிப்படையாக இல்லை என்பது தெளிவாகிறது. எனது கருத்தின் படி, ஜனநாயக நாட்டில் குடிமக்கள் அரசாங்கத்தின் மனசாட்சியாக இருப்பவர்கள். அவர்கள் மாநிலக் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்பதால் அவர்களை சிறையில் அடைக்க முடியாது.
களங்கப்படுத்த முடியாது
குற்றச்சாட்டுகள் பொய்யானவை, மிகைப்படுத்தப்பட்டவை அல்லது ஏதேனும் ஒரு நோக்கத்துடன் கூட முன்வைக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் வன்முறையைத் தூண்டுவதற்கான எந்த நோக்கமும் இல்லாத போது தேசத்துரோகியாக அவர்களை களங்கப்படுத்த முடியாது.
ஜனநாயகத்தின் அடையாளம்
கருத்து வேறுபாடு, ஒப்புக்கொள்ளாமை, மாறுபட்ட சிந்தனை, இணங்காமை, மறுப்பு போன்றவையெல்லாம் மாநிலக் கொள்கைகளின் குறிக்கோளை ஊக்குவிக்க அங்கீகரிக்கப்பட்ட முறையான கருவிகளே. விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை கொண்ட ஒரு குடிமகன், அலட்சியமான அல்லது கட்டளைக்கு பணியக்கூடிய ஒரு குடிமகனுடன் முரண்படுவது என்பது, மறுக்கமுடியாத வகையில் ஆரோக்கியமான மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் அடையாளமாகும்.
உன்னத எண்ணங்கள்
நம்முடைய 5,000 ஆண்டுகள் பழமையான இந்த நாகரீகம் ஒருபோதும் மாறுபட்ட பகுதிகளிலிருந்து வரும் வெவ்வேறு கருத்துக்களை வெறுக்கவில்லை. ரிக் வேதம், வேறுபட்ட கருத்துக்களுக்கான நமது மரியாதையை வெளிப்படுத்தும் நமது கலாச்சார நெறிமுறைகளை உள்ளடக்குகிறது. அதில், 'எல்லா திசைகளிலிருந்தும் உன்னத எண்ணங்கள் என்னிடம் வரட்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இது பொருந்தும்
எனது கருத்தின் படி, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது உலகின் அனைவருக்கும் பொதுவானது. தகவல்தொடர்புக்கு புவியியல் தடைகள் என்று எதுவும் இல்லை. ஒரு குடிமகனுக்கு தகவல்தொடர்பு வழங்குவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வழிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமைகள் உள்ளன. சட்டத்தின் நான்கு மூலைகளிலும் இது அனுமதிக்கப்படும். வெளிநாடுகளின் பார்வையாளர்களுக்கும் இது பொருந்தும்" என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.