நாடு முழுவதும் பள்ளி ‘கேண்டீன்’களில் நொறுக்குத் தீனிகளை விற்க தடை.. மத்திய அரசு முக்கிய உத்தரவு
Recommended Video
டெல்லி: நாடு முழுவதும் பள்ளி கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் விற்க தடை விதித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது"
பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் 'கேண்டீன்'கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்றுண்டி கடைகளில் மாணவர்களின் நலனை பேணும் விதத்தில் உணவுகள் விற்கப்படுவதே சரியானது. ஆனால் கேண்டீன்களில் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
அதிக உப்பு
எப்போதுமே அதிக கொழுப்புகள் நிறைந்த, அதிக காரம் நிறைந்த, அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. எனவே பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் மற்றும் மேற்கண்ட விதமான உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
50 மீட்டர் சுற்றளவு
பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அந்த கடைக்காரர்களும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்தல் கூடாது. இதுகுறித்து உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
நல்ல உணவு
பள்ளி கேண்டீன்களில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறக்கூடாது. இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நல்ல உணவு மட்டுமே மாணவர் நலனுக்கு உறுதுணை. இதர தரமற்ற பொருட்கள் மாணவர்களின் உடல்நலனை பாதிக்கும்.
எனவே மாணவர்களின் உடல்நலம் பேணுவது முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அறிவுரைகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்று கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.
பள்ளிகள் ஆய்வு
இதுதொடர்பாக அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமே தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் என்ன வகையான உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்? அது தரமானதா? என்று ஆய்வு நடத்த வேண்டும்.மேலும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை அமைத்துள்ள கண்காணிப்பு குழுவுடன் இணைந்தும் பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வுகளை நடத்த வேண்டும்.
என்னென்ன உணவு
தங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கேண்டீன்களில் என்னென்ன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன? உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்பதல் வேண்டும்.
உறுதி செய்யணும்
பள்ளி வளாகங்களிலும் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை மூலம் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேல குறிப்பிட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்து பள்ளி நிர்வாகங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.