இந்த போட்டோவை பாருங்க! 59 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்தது "பிரம்மாண்ட" வியாழன் கிரகம்!
டெல்லி: நமது சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் கோள், பூமிக்கு மிக அருகில் நேற்று வந்தது. இதனை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பார்த்து ரசித்தனர்.
59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இப்படி ஓர் அற்புத நிகழ்வு நடைபெற்றதை மக்கள் கண்டு பூரிப்படைந்தனர். வியாழன் கோளின் பிரம்மாண்டத்தை கண்டது பலரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளது.
நமது பிரபஞ்சம் எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏராளமான கோள்கள் அமைந்திருக்கின்றன.
சென்னை வளசரவாக்கம் ஹோட்டல் சரவண பவனில் ஏசி இயந்திர சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் காயம்
'மெகா' கோள்
அந்த வகையில், நமது சூரியக் குடும்பத்தில் பூமி உட்பட 9 கோள்கள் இருக்கின்றன. இந்த கோள்களிலேயே மிகப் பெரியதாக அறியப்படுவது ஜூபிட்டர் எனப்படும் வியாழன் கோள் தான். இதன் அளவை விளக்குவது என்றால், நம் பூமியை போன்ற அளவுடைய 1,300 பூமிகளை வியாழன் கோளுக்குள் அடக்கிவிட முடியும் எனக் கூறலாம். அந்த அளவுக்கு பிரம்மாண்டமானது வியாழன் கோள்.
69 நிலவுகள்..
அதுமட்டுமல்லாமல், வியாழன் கோளுக்கு இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது முழுக்க முழுக்க ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் நிரம்பிய கோள் ஆகும். அனைத்து கோள்களையும் விட மிக வேகமாக சுற்றும் கோளாகவும் வியாழன் உள்ளது. சனிக் கோளை போலவே வியாழன் கோளை சுற்றிலும் வளையங்கள் அமைந்துள்ளன. இது தூசுப் படலங்களால் ஆனவை. அதேபோல, வியாழன் கோளில் 69 நிலவுகள் இருக்கின்றன.
பூமிக்கு அருகில் வந்தது
இத்தனை சிறப்பு வாய்ந்த பிரம்மாண்ட வியாழன் கோள் தான், நேற்று பூமிக்கு மிக நெருக்கமாக வந்தது. 59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் ஓர் அரிய நிகழ்வு இது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நேற்றைய தினம், மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழக்கு திசையில் இருந்து வியாழன் எழுந்தது. இவ்வாறு பூமிக்கு நேர் எதிர் திசையில் ஒரே நேர்கோட்டில் வியாழன் கோள் நெருக்கமாக வந்தது வழக்கமாக, பூமியில் இருந்து 965 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும் வியாழன் கோள், நேற்று பூமிக்கு 365 மில்லியன் கி.மீ. தொலைவுக்கு வந்தது.
கண்டு ரசித்த மக்கள்...
இந்நிலையில், பூமிக்கு அருகில் வந்த வியாழன் கோளை உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் பார்ப்பதை விட சாதாரண பைனாக்குலர் அல்லது டெலஸ்கோப் மூலமாக பார்க்கும் போது வியாழன் கோளை மிகத் தெளிவாக பார்க்க முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
பொதுவாக, சூரியன் மறைந்த பிறகு வானில் கிழக்கு திசையில் மிகவும் பிரகாசமாக ஒரு நட்சத்திரம் மின்னுவதை நாம் பார்த்திருப்போம். உண்மையில் அது நட்சத்திரம் இல்லை. அதுதான் வியாழன் கோள். தற்போது அது இன்னும் பெரிதாக காட்சியளிக்கும். பைனாகுலர் மூலம் பார்க்கும் போது வியாழன் கோளின் பிரம்மாண்டத்தை நாம் காணலாம்.
எப்போது வரை பார்க்கலாம்?
பூமிக்கு அருகே வந்திருக்கும் இந்த வியாழன் கோளை இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 59 ஆண்டுகளுக்கு பிறகு, வியாழன் கோள் பூமிக்கு அருகே தற்போது வந்திருக்கிறது. ஆனால், அடுத்து இதுபோன்று வியாழன் கோள் பூமிக்கு அருகில் வர 107 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.