சபரிமலை: கடந்த முறை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்து மல்கோத்ரா.. இப்போது பெரும்பான்மை பக்கம்
Recommended Video
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிப்பது தொடர்பான சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட காரணமான நீதிபதிகளில் இந்து மல்கோத்ராவும் ஒருவர். அதேநேரம், சபரிமலை தொடர்பான முந்தைய தீர்ப்பில், பிற 4 நீதிபதிகளின் கருத்திலிருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதுமே இவர்தான்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிக்க வலியுறுத்திய வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
பக்தியை பாலின பாகுபாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்
பெண் நீதிபதி
ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், சபரிமலையில் ஏற்கனவே பின்பற்றப்படும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஆகிய, இந்த பெஞ்சில் அங்கம் வகித்த பிற 4 நீதிபதிகளும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கினர்.
இந்து மல்கோத்ரா கூறியது என்ன
இந்து மல்ஹோத்ரா தனது தீர்ப்பில், ஆழ்ந்த மத அர்த்தத்துடன் கூடிய விவகாரங்களை, மதச்சார்பற்ற கொள்கையுடன் கொண்டு முடிச்சுப் போடக்கூடாது. எந்தெந்த மத நடைமுறைகளை கடைபிடிக்க கூடாது என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க அவசியம் இல்லை. உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக தீமை தொடர்பான பிரச்சினைகளை நீதிமன்றம் தடுத்தால் போதும் என்று தெரிவித்திருந்தார்.
மத உரிமை
மேலும் அவர் கூறுகையில், அனைவருக்கும் சம உரிமை என கூறிக்கொண்டு, சபரிமலை ஐயப்பனை வணங்கும் பக்தர்களின் உரிமையில் நாம் தலையிட கூடாது. சமத்துவத்திற்கான உரிமை, அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் வழிபடுவதற்கான அடிப்படை உரிமையை மீற முடியாது என்றும் இந்து மல்கோத்ரா கூறினார். பகுத்தறிவு பற்றிய கருத்துக்களை மத விஷயங்களில் கொண்டு வர முடியாது என்றும் அவர் கூறினார். மல்கோத்ரா இந்த வழக்கில் சபரிமலைக்கு மட்டுமல்ல, மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் நீண்டகால தாக்கங்களை இந்த தீர்ப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார். இருப்பினும் மற்ற 4 நீதிபதிகளும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிக்கலாம் என கூறியதால், அந்த தீர்ப்பே அமலுக்கு வந்தது.
சீராய்வு மனு
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்விலும் இந்து மல்கோத்ரா இடம் பெற்றிருந்தார். அவர், இந்த சீராய்வு மனுவை டிஸ்மிஸ் செய்ய கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார். ரஞ்சன் கோகாய் மற்றும் கன்வில்கரும் இதில் உடன்பட்டனர். எனவே 3 நீதிபதிகளின் தீர்ப்பால், இந்த மனு, 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
3 நீதிபதிகள் கருத்து
ஆர்.எப்.நாரிமன் மற்றும் டி.எப்.சந்திரசூட் ஆகிய 2 நீதிபதிகள், சீராய்வு மனுவை டிஸ்மிஸ் செய்ய கூறினர். அதாவது, கடந்த முறை, பெரும்பான்மை நீதிபதிகளிடமிருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்த மல்கோத்ரா, இம்முறை பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துடன் இசைந்துபோயுள்ளார். கடந்த முறை, பெண்களை கோவிலுக்குள் செல்லலாம் என கூறிய நீதிபதிகளில் ஒருவரான கன்வில்கர் இம்முறை தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அவர், இதை 7 நீதிபதிகள் பெஞ்ச் பரிசீலிக்கலாம் என கூறியுள்ளார்.