வானமே எல்லை.. ஒருவர் தன்னை பிரதமராக்கவும் கேட்டு வாதம் செய்யலாம் .. ரோத்தகிக்கு நீதிபதி நறுக்
டெல்லி: வானமே எல்லை, யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கேட்கலாம், ஒருவர் தன்னை பிரதமராக்க வேண்டும் என்றும் கேட்கலாம் என பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகிக்கு நீதிபதி என்வி ரமணா பதில் அளித்தார்.
மகாராஷ்டிரா அரசியலில் நேற்று விடிந்தும் விடியாததுமாக பல்வேறு திடீர் திருப்பங்கள் உருவானது. இதனால் சேனா, காங்கிரஸ், என்சிபி உள்ளிட்ட கட்சிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலு்ம காணப்படுகின்றனர்.
அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் முன்னறிவிப்பின்றி தேவேந்திர பட்னவீஸுக்கும் அஜித் பவாருக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனுவை தாக்கல் செய்தது. இதில் காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆகிய கட்சிகளும் இணைந்து வழக்கை தாக்கல் செய்தன.
ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார்.. நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.. அதனால்தான்.. அரசு தரப்பு ஷாக் வாதம்!
நீதிபதிகள்
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்தன. நீதிபதிகள் என்வி ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
எந்த வழக்கறிஞர்கள்
இதில் சிவசேனா - காங்கிரஸ் - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, பாஜக சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.
இணைப்புகள் இல்லை
முகுல் ரோத்தகி வாதம் செய்கையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன் கூட்டியே நடத்துமாறு ஆளுநருக்கு இந்த சுப்ரீம் கோர்ட்டால் உத்தரவிட முடியுமா? அவர்களின் மனுவில் எவ்வித இணைப்புகளும் இல்லை. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
அடிப்படை உரிமைகள்
3 வாரங்களாக தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் கோரிக்கைக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. இன்றே உத்தரவிட்டாக வேண்டும் என்ற கோர்ட்டுக்கு அவசியம் இல்லை. ஆளுநர் முடிவில் எந்தவித சட்டவிதி மீறலும் இல்லை. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் எந்தவித தேதியை அறிவிக்க கூடாது. அந்த மூன்று கட்சிகளுக்கும் எவ்வித அடிப்படை உரிமைகளும் இல்லை.
பதிலடி
நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாத சில விஷயங்கள் குடியரசுத் தலைவருக்குள்பட்டு இருக்கின்றன என்று கூறிய ரோத்தகி, வாதிகள் மனு தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி ரமணா பதிலடி கொடுத்தார்.
பிரதமராக்கக் கோரி
அவர் கூறுகையில் இந்த நீதிமன்றத்தை பொருத்தவரை வானமே எல்லை, யார் வேண்டுமானாலும் எது வேணாலும் கேட்கலாம். யார் வேண்டுமானாலும் தன்னை பிரதமராக்கக் கோரி கேட்கலாம் என தெரிவித்தார் நீதிபதி ரமணா.