பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு
டெல்லி: லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டு நிறைவேற்றியது. தொடர்ந்து அதற்கான நியமன விதிகளும் வகுக்கப்பட்டன.
லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருக்க வேண்டும். ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.
உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.34.8 லட்சம் பறிமுதல்... பறக்கும் படையினர் அதிரடி
நீதித்துறை உறுப்பினர்கள்
அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பதவிக்காலம் 5 ஆண்டுகள்
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை என்பதாகும். லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
ஊதியம் வழங்கப்படும்
லோக்பால் உறுப்பினருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். லோக்பால் ஆணையத் தலைவரை நியமிப்பது குறித்து, பிரதமர் மோடி தலைமையிலான லோக்பால் தேர்வுக் குழுவினர் இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனை கூட்டம்
அண்மையில் லோக்பால் தேர்வுக் குழுவின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை காங்கிரஸ் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்தார்.
அறிவிப்பு இல்லை
லோக்பால் அமைப்பின் முதலாவது தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
லோக்பால் தலைவர்
இந்நிலையில் லோக்பால் ஆணையத்தின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையர்
பினாகி சந்திர கோஷின் வயது 66. 2017ம் ஆண்டில் ஓய்வுபெற்றவர். அதன்பின்னர், அதே ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நீடித்து வருகிறார்.
4 பேர் நியமனம்
பினாகி சந்திரகோஷூடன் மேலும் 4 பேர் லோக்பால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். நீதிபதிகள் திலீப் போசல், பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திருப்பதி ஆகியோர் லோக்பால் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நியமனம்
தமிழகத்தின் அர்ச்சனா ராமசுந்தரம் லோக்பால் உறுப்பினராக அறிவிக்ப்பட்டு உள்ளார். அவருடன் தினேஷ்குமார் ஜெயின், மொகந்தர் சிங், இந்திரஜித் பிரசாத் கவுதம் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.