நீதிபதி சிக்ரிக்கு புதிய பதவி கொடுத்த மத்திய அரசு.. நிராகரித்த சிக்ரி.. பின்னணி என்ன?
மத்திய அரசு அளித்த காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி நிராகரித்துள்ளார்.
டெல்லி: மத்திய அரசு அளித்த காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி நிராகரித்துள்ளார்.
கடந்த வாரம் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி கூடி இந்த முடிவை எடுத்தது.
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்பு கூட்டம் மூலம் அலோக் வெர்மா நீக்கப்பட்டார். பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி அமர்வு இந்த முடிவை எடுத்தது.
இவர்கள் நடத்திய ஆலோசனையில் அலோக் வெர்மாவை நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இதற்கு எதிராக வாக்களித்தார். 2 பேர் ஆதரவாக வாக்களித்ததால், அலோக் வெர்மா நீக்கப்பட்டார்.
நீதிபதி ஏ.கே சிக்ரி அலோக் வெர்மாவை நீக்க வேண்டும் என்று வாக்களித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் மத்திய அரசு நீதிபதி சிக்ரிக்கு லண்டனை தலைமையிடமாகக் கொண்ட காமன்வெல்த் தீர்ப்பாய அமைப்பின் தலைவர் பதவியை அளித்தது.
நீதிபதி சிக்ரி பல நாட்களாக எதிர்பார்த்த பதவி இது என்று கூறப்பட்டது. இந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காகத்தான் நீதிபதி மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்று பெரிய விவாதம் நடந்தது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அளித்த காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி நிராகரித்துள்ளார். இது தொடர்பாக வந்த செய்திகளை அடுத்து நீதிபதி சிக்ரி பதவியை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.