கைலாச மானசரோவர் புனித யாத்திரை... முதல் குழு பயணத்தை தொடங்கியது
டெல்லி: கைலாச மானசரோவர் புனித யாத்திரையை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக இந்துக்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த யாத்திரை செல்பவர்கள், சீன எல்லையை கடந்துதான் கைலாய மலைக்கு செல்ல வேண்டும்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், புனித யாத்திரை செல்லும் முதல் குழுவை கொடி அசைத்து அனுப்பி வைத்தார். முன்னதாக அவர் கூறியதாவது: கைலாஷ்-மானசரோவர் யாத்திரை, மக்களிடையே நடக்கும் அன்பு பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்தியா - சீனா இடையிலான நட்பையும், புரிதலையும் வலுப்படுத்துகிறது.
"பொதுச்செயலாளர்" எடப்பாடியாரே வருக.. அதிமுகவில் வெடித்து கிளம்பியது அடுத்த போஸ்டர் சர்ச்சை!
இந்தாண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்காக வெளியுறவு அமைச்சகத்துக்கு 2,996 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவர்களில் 2,256 பேர் ஆண்கள், 740 பேர் பெண்கள். மூத்த குடிமக்கள் 624 பேர் விண்ணப்பித்து உள்ளனர். உத்தரகாண்டின் லிபுலேக் வழியாக தலா 60 பக்தர்கள் வீதம், 18 குழுவினர் செல்ல உள்ளனர்.
சிக்கிமின் நதுலா வழியாக தலா 50 பக்தர்களை கொண்ட 10 குழுக்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றன. சீன தூதராக இருந்தபோது, தானும் யாத்திரையை மேற்கொண்டிருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். யாத்திரை செல்லும் பக்தர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கைலாச மானசரோவர் புனித யாத்திரை செல்பவர்களின், நலனுக்காக மருத்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு, கைலாச மானசரோவர் புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.