3வது அணி பிறக்கிறதா.. டெல்லியில் கமல் மையம்.. காரத், கெஜ்ரிவாலுடன் அடுத்தடுத்து சந்திப்பு
Recommended Video
டெல்லி: 3-வது அணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கமல் அன்று கொளுத்தி போட்டது முதல் தேர்தல் களம் கனன்று வருகிறது. அத்துடன், நாளுக்கு நாள் அரசியலில் விஸ்வரூபமெடுத்து வரும் கமல், இப்போது டெல்லியில் முகாம் இட்டுள்ளது மேலும் பரபரப்பு நிறைந்த சூட்டை கிளப்பி உள்ளது.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு திமுகவும் செட் ஆகவில்லை, அதிமுகவும் செட் ஆகவில்லை. இதனால் 3-வது அணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்ததுடன், நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும் அழைப்பும் விடுத்தார்.
இதற்கு அர்த்தம், ஊழல் கறை இல்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் தன்னுடன் கூட்டணி வைக்கலாம் என்பதாகும். கமல் இப்படி சொல்லியதில் இருந்து இதுவரை இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
பிறகு விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் உறுதியாக தெரியவில்லை. இதை தவிர வேறு கட்சிகள் ஏதாவது முயற்சி செய்து வருகிறதா என்பது பிடிபடவில்லை. இதில் விஜயகாந்த்தை கமல் கண்டிப்பாக பேசி அழைத்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இப்போது கமல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அங்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தை சந்தித்து இருக்கிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தையா?
கூட்டணி அமைக்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழகத்தில் உள்ளபோது கமல் எதற்காக டெல்லி சென்றார் என்பது கேள்வியாக இருந்தாலும், அதே கூட்டணி விஷயத்துக்காகத்தான் அங்கு முகாமிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கமலுடன் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரனும் உடன் வந்துள்ளார். திமுக கூட்டணியில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
தேமுதிக பாணி
அப்படியே கூட்டணி அமைத்தாலும் ஆளுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்றே தெரிகிறது. ஒருவேளை கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்கிறதா அதனால் பிரச்சினை எழுந்துள்ளதா என்றும் தெரியவில்லை. அதேபோல தேமுதிக பாணியில் ஒரே சமயத்தில் திமுகவுடனும், கமலுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்றும் தெளிவாகவில்லை. அதனால் கமலுடன் நடத்தும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வசீகரன்
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆரம்பத்திலிருந்தே நட்பு வைத்திருப்பவர் கமல். அதனால் ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் வசீகரன் கண்டிப்பாக கமலுடன் இணைந்தே தீருவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை மார்க்சிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி இரு கட்சிகளுமே கமலுடன் இணைந்தால் அது ஆரோக்கியமானதாகவே இருக்கும். இந்த கட்சிகள் அனைத்துமே ஒரே எண்ண ஓட்டத்தை கொண்டவை. கருத்து ஒற்றுமையில் பலமானவை. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை கமல் டெல்லியில் நடத்தி இருந்தாலும் அது வரவேற்கப்படக்கூடியதே.
மரியாதை கிடைக்கும்
தமிழகத்தில் பிரமாண்டமான கட்சி, வலுவான கட்சியாக இல்லாவிட்டாலும் மேலும் சில கட்சிகள் கமலுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், அவர்கள் அனைவரும் மரியாதை இல்லாமல் கடந்த காலங்களில் கூட்டணி கட்சிகளால் நடத்தப்பட்ட விதமே ஆகும். மரியாதையுடன் கூடிய கண்ணியம் கமல் கட்சியில் இணைந்தால் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதே கமலின் முதல் வெற்றியாக உள்ளது.