"ஐட்டம்".. என்ன பேச்சு இது.. கமல்நாத்தே இப்படிப் பேசினால் எப்படி.. சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய பெண் தலைவர் ஒருவரை மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், ஐட்டம் என்று விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கமல்நாத் மீது மத்தியப் பிரதேச பாஜக கட்சியினர் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்களையும், தலித் சமுதாயத்தினரையும் கமல்நாத் அவமதித்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மத்தியப் பிரதேச முதல்வராக 15 மாதங்கள் இருந்த நிலையில் உட்கட்சிப் பூசலால் பதவியையும் ஆட்சியையும் இழந்தவர் கமல்நாத். இந்த நிலையில் புதிய சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.
ம.பி சட்டசபை இடைத் தேர்தல்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 3ம் தேதி 28 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் கமல்நாத் பேசிய பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. தப்ரா என்ற இடத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கமல்நாத் கலந்து கொண்டு பேசினார்.
கமல்நாத் சர்ச்சை பேச்சு
கமல்நாத் இக்கூட்டத்தில் பேசுகையில், பாஜக வேட்பாளர் இமார்தி தேவியை கேவலமாக விமர்சித்துள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மோதுகிறது. இமார்தி தேவி முன்பு காங்கிரஸில் இருந்தவர். பின்னர் பாஜகவுக்கு மாறியவர். இந்த பெண் தலைவரைத்தான் அவதூறாகப் பேசி சிக்கியுள்ளார் கமல்நாத். இமார்தி தேவி குறித்து பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில் அசிங்கமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் ஒரு ஐட்டம்
கமல்நாத் பேசுகையில், எங்களது வேட்பாளர் மிகவும் எளிமையானவர். எதிர்க்கட்சி வரிசையில் போட்டியாளராக நிற்கும் இமார்தி தேவி போல "ஐட்டம்" கிடையாது அவர். அந்த பெண்ணின் பெயரைக் கூட சொல்ல நான் விரும்பவில்லை. உங்களுக்கே தெரியும் அவர் ஐட்டம் என்று அவர் சொல்லப் போக பெரும் சர்ச்சையாகி விட்டது. அத்தோடு நில்லாமல், நான் சொல்லும் ஐட்டம் யார்னு உங்களுக்கே தெரியும் என்று கூறி நிறுத்த, கூட்டத்தினர் இமார்திதேவி என்று கூச்சலிட்டனர்.
தேவையில்லாத சர்ச்சை
இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த பேச்சுக்கு ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செளகான் கூறுகையில், சாதாரண ஏழை விவசாயியின் மகள் இமார்த்தி தேவி. கட்சியின் அடிமட்டத்திலிருந்து உழைத்து மேலே வந்துள்ளார். சாதாரணக் கூலித் தொழிலாளியாக இருந்தவர். பொது சேவைக்கு வந்த பெண்ணை, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை இப்படி விமர்சித்திருப்பது மிகவும் இழிவானது. ஒரு பெண் தலைவரை இப்படியா விமர்சிப்பது என்று கடுமையாக கண்டித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
இந்த நிலையில் கமல்நாத் மீதும், காங்கிரஸ் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி போபாலில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளார். அதில் இமார்தி தேவியை ஐட்டம் என்று சொன்னதன் மூலம் பெண்களையும் தலித் சமுதாயத்தினரையும் காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலுக்கான காரணம்
காங்கிரஸில் இருந்தபோது, இமார்தி தேவி உள்ளிட்ட 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜோதிராத்தியா சிந்தியாவின் ஆதரவாளர்களாக மாறினர். பின்னர் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தனர். அதனால்தான் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. இப்போது அந்த இடத்திற்குத்தான் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.