ராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்
டெல்லி: மத்திய பிரதேச பாஜக தலைவர் இமார்தி தேவியை தகாத வார்த்தைகளால் கமல்நாத் அழைத்தது மிகவும் துரதிருஷ்டவசமானது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்நாத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பாஜக வேட்பாளர் இமார்தி தேவியை ஐட்டம் என கமல்நாத் கேவலமாக விமர்சித்தார். இந்த இமார்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவியவர். பாஜக சார்பில் போட்டியிடும் இமார்த்தி தேவியை போல ஐட்டம் கிடையாது. அந்த பெண்ணின் பெயரைக் கூட நான் சொல்ல விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவமானம்
இதுதொடர்பாக கமல்நாத் மீது மத்தியப் பிரதேச பாஜக கட்சியினர் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்களையும், தலித் சமுதாயத்தினரையும் கமல்நாத் அவமதித்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பு
இதையடுத்து கமல்நாத் நேற்றைய தினம் தான் கூறியமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வயநாடு சென்றுள்ள ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கமல்நாத் என்னுடைய கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம்.
கருத்துகள்
ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அத்தகைய கருத்துகளை கூறியிருக்கக் கூடாது. அவர் யாராக இருந்தாலும் சரி இது போன்ற மூன்றாம் தர வார்த்தைகளை நான் ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டேன். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ராகுல்.
அவமானப்படுத்தும் நோக்கு
ராகுலின் கருத்து குறித்து கமல்நாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் இது ராகுல்காந்தியின் கருத்து, நான் எதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் என்பதை விரிவாக கூறிவிட்டேன். அவ்வாறு இருக்கும் போது யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் நான் அந்த வார்த்தையை கூறாத நிலையில் ஏன் நான் மன்னிப்பு கோர வேண்டும்?
#WATCH It is Rahul Gandhi's opinion. I have already clarified the context in which I made that statement... Why should I apologise when I did not intend to insult anyone? If anyone felt insulted, I have already expressed regret: Former MP CM Kamal Nath https://t.co/Io2z9b3Tiu pic.twitter.com/nfB8Eum4nH
— ANI (@ANI) October 20, 2020
சவுகான் கண்டனம்
நான் அவமானப்படுத்தியதாக யாராக நினைத்தால் அதற்காக நான் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன் என்றார். ராகுல்காந்தி கோரியும் கமல்நாத் மன்னிப்பு கோர மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் கமல்நாத்தின் கருத்தை கண்டிக்கவும் அவரை அனைத்து பதவிகளிலிருந்து நீக்கவும் வலியுறுத்தியுள்ளார்.