நிறுத்துங்க.. வெறுப்பின் பிள்ளைகள் தறிகெட்டு திரிவதா.. வெறியாட்டம் வேண்டாம்.. கமல்ஹாசன் காட்டம்!
டெல்லி: "வெறுப்பின் பிள்ளைகள் தறிகெட்டுத் திரிவதை எப்படி அனுமதிப்பது. நிறுத்துங்கள்... முன்புபோல் மீண்டும் இந்தியா இந்த வெறியாட்டத்திலிருந்து மீண்டுவர விழைகிறேன்' என்று கமல்ஹாசன் டெல்லி வன்முறை குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் கலவரம் வெடித்துள்ளது.. அந்த கலவரத்தை அடக்க டெல்லி மாநில போலீசாரும் மத்திய அரசும் மிக மிக தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். யமுனா விஹார் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என டெல்லி போலீஸ் ஸ்பீக்கர்கள் மூலம் கலவர பகுதிகளில் அறிவித்து வருகின்றனர்.
டெல்லி போலீஸ்
இதுவரை கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 என்று தகவல் வெளிவந்துள்ளது. அப்போது கண்டதும் சுட உத்தரவு என்பது கூடுதல் பதற்றத்தை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் தகவலை டெல்லி காவல்துறை மறுத்திருக்கிறது. இன்னொரு பக்கம், ஒரு சில அரசியல்வாதிகள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கமல்
இது சம்பந்தமாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.. ட்விட்டர்வாசிகளும், சோஷியல் மீடியாவில் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி வன்முறை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
|
வெறியாட்டம்
அதில், "வேற்றுமையிலும் ஒன்றுபட்ட இந்தியாவில், வெறுப்பின் பிள்ளைகள் தறிகெட்டுத் திரிவதை எப்படி அனுமதிப்பது. நிறுத்துங்கள்... காலம் கடக்கும் முன் காரணம் குறித்து சிந்திக்கத் திரும்புங்கள்... மனிதர்களே வெறுப்பை போதிப்பார்கள், மதங்கள் இல்லை.... முன்புபோல் மீண்டும் இந்தியா இந்த வெறியாட்டத்திலிருந்து மீண்டுவர விழைகிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கமெண்ட்கள்
பொதுவாக, கமல்ஹாசன் மீது பாஜகவின் பிம்பம் என்ற சாயல் இருந்து கொண்டே உள்ளது.. டெல்லி கலவர ட்வீட்டில் பாஜக சம்பந்தமாகவும், அக்கட்சி தலைவர்கள் பெயரைகூட குறிப்பிடவில்லையே என்றும் சிலர் கமலுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். "பிஜேபி, மோடி, அமித்ஷா, அரச பயங்கரவாதம், போலிஸ் அராஜகம், ஆர்எஸ்எஸ் இந்து தீவிரவாத கூட்டம்.. இந்த வார்த்தையெல்லாம் பயன்படுத்தி ஒரு டுவிட்டாவது... அட்லீஸ்ட் ட்ரையாவது பண்ணலாம்" என்று ஒருவர் ட்வீட் போட்டுள்ளார். அதேபோல, "மதமும் மதம் பிடித்தவர்களும் ஒழியுர வர இது ஓயாது தலைவா.." என்று ஆதரவு கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.