ரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது!
டெல்லி: மத்திய பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தின் சகோதரி மகன் ரதுல் புரி, ரூ354 வங்கி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வந்த மோசர் பெர் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் ரதுல் புரி. இவர் மீது வங்கி கடன் மோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ரதுல் புரி, அவரது தந்தை தீபக் புரி, தாயார் நீதா புரி, சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
மேலும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கிலும் ரதுல் புரி விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் தற்போது வங்கி கடன் மோசடி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் நேற்று விசாரணைக்கு ரதுல் புரி ஆஜரானார். இந்த விசாரணைக்குப் பின் ரதுல் புரி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக கைது நடவடிக்கைகளுக்கு தடை கோரியும் முன்ஜாமீன் கோரியும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ரதுல் புரி தாக்கல் செய்த மனு கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
மோசர் பெர் நிறுவனமானது சிடி, டிவிடிக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.