டெல்லி திமுகவில் ஒரு அனல் போட்டி.. லோக்சபாவில் யார் பெஸ்ட்.. கனிமொழியுடன் மோதும் தமிழச்சி
Recommended Video
டெல்லி: லோக்சபாவில் சிறப்பாக செயல்படுவது யார் என்ற சூடான போட்டி திமுகவினர் மத்தியில் நிலவுகிறதாம். குறிப்பாக கனிமொழியை எப்படியும் மிஞ்சி விட வேண்டும் என்ற வேகத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆர்வமாக செயல்பட்டு வருகிறாராம்.
கருணாநிதி மறைவுக்குப் பின் கனிமொழியே தன்னை நிரூபிக்க நினைத்தாரோ, அல்லது ஸ்டாலின் தான் அவருக்கு தேர்தல் அரசியலின் சவால்களை காட்ட நினைத்தாரோ அல்லது கனிமொழிக்கு கட்சியிலும், மக்களிடத்திலுமுள்ள செல்வாக்கை எடை போட நினைத்தாரோ தெரியவில்லை அவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வைத்தார். எதிரில் தேசிய பலம் வாய்ந்த பி.ஜே.பி.யின் மாநில தலைவர் தமிழிசை. ஆயிரம் யூகங்களை அடித்து நொறுக்கிவிட்டு தாறுமாறான வித்தியாசத்தில் வென்றார் கனி.
என்னை நிரூபித்துவிட்டேன்! இனி கழகத்தின் டெல்லி முகமாகவும், தமிழகத்தில் கட்சியின் பெண் முகமாகவும் இருப்பேன்! என்று தன் அம்மா ராசாத்தி மற்றும் நெருங்கிய உறவுகள், நட்புக்களிடம் பெருமை பேசிவிட்டு ஃபிளைட் ஏறினார் கனிமொழி. ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. டெல்லியில் ஸ்டாலினின் மனசாட்சியாக இருப்பார் கனிமொழி! என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.ஆர்.பாலுவுக்கு முழு அதிகாரம் தந்து உலவவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
தமிழச்சி தங்கப்பாண்டியன்
மறுபக்கம் தமிழச்சி தங்கப் பாண்டியனும் கனிமொழிக்கு செம டஃப் கொடுக்கிறாராம். ஆம், டெல்லியில் தி.மு.க.வின் பெண் முகமாக முன்னேற துடிக்கிறார் தமிழச்சி எம்.பி. என்கிறார்கள் கனியின் ஆதரவாளர்கள். தோற்றத்தில் மட்டுமல்ல, பேச்சு, நடை என எல்லா விதங்களிலும் தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டத்தை எப்போதுமே உருவாக்கிக் கொள்வதில் சாதுர்யமான தமிழச்சி டெல்லியில் தி.மு.க.வின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க முயல்கிறார்.
நல்ல தோழிகள்தான்
அடிப்படையில் கனியும், தமிழும் தோழிகள்தான். ஆனால், அரசியலில் முன்னேற வேண்டுமெனும் போட்டி அவரை தலைவரின் மகளுக்கே எதிரியாக்குகிறது! என்கிறார்கள். கனியோடு மல்லுக்கட்டி போட்டியிட தமிழச்சியை சில சக்திகள் தூண்டுகின்றன! என்கிறார்கள். இதில் கனிக்கு மிகப்பெரிய மன வருத்தம். டெல்லியில்தான் இந்த நிலை என்றால், சென்னை அதற்கும் மேல் வாட்டி வதைக்கிறது கனிமொழியை.
மன வருத்தம்
தனது அப்பாவும், கழக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்வுகளுக்கு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பெண் என்பதால் அவரை வரவேற்க தான் இருக்க வேண்டும்! எனும் எண்ணத்தில் விறுவிறுவென டெல்லியிலிருந்து கிளம்ப தயாராகி இருக்கிறார் கனி. ஆனால், ‘அவசரமாக வரவேண்டாம். மம்தாவை வரவேற்கும் பொறுப்பு உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.' என்று தகவல் அவரது தலையில் இடியாய் விழுந்தது. பல்லைக் கடித்துக் கொண்டார். விழா நிகழ்வுகளிலும் முன்னுரிமை இல்லாமல் அடக்கி வைக்கப்பட்டார்.
அமைதி காக்கும் ஸ்டாலின்
அதேபோல் கருணாநிதியின் நினைவு தினத்தன்று அண்னா சிலையிலிருந்து கிளம்பியது மெளன ஊர்வலம். அப்போது தன் அண்ணன் ஸ்டாலினுடனேயே நடந்து வந்தார் கனிமொழி. ஆனால் ஒரு கட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவரை பீட் செய்ய முயன்றிருக்கிறார். கனிமொழி, எரிந்து விழுந்து விட்டாராம். மொத்தத்தில் கனிமொழிக்கு சாதகமான நிலை இன்னும் முழுமையாக இல்லை என்பதே நிலவரம் என்கிறார்கள்.
- ஜி.தாமிரா