கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இங்கு காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது. பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக இருந்தது. அங்கு சட்டசபை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.
5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என உறுதியாக கூறப்படுகிறது. இங்கு ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதேபோல் கன்னியாகுமரியில் எப்போதும் வலுவாக இருக்கும் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.