சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி
Recommended Video
டெல்லி: தனது தந்தைக்கு எதிரான வழக்கில் அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோரின் வாதங்கள் சிறந்த பாடம் என்றும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாதங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று சிபிஐ அதிகாரிகளால் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் முன் இன்று சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினர்.
சிபிஐ தரப்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார். அவர் அப்போது பேசுகையில், ப சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
கையெழுத்து மட்டுமே போட்டார்
அதன்பிறகு சிதம்பரம் சார்பில் வாதிட்ட கபில் சிபல் "ஐஎன்எக்ஸ் வழக்கில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேர் ஜாமின் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்டது. அதனால் இந்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை. சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை. ப. சிதம்பரம் நிதி அமைச்சராக கையெழுத்து மட்டுமே போட்டார்.
ஒரு நாள் மட்டுமே விசாரணை
இந்த வழக்கில் ப.சிதம்பரம் மட்டுமே குறி வைக்கப்படுகிறார். அந்நிய முதலீட்டு மேம்பட்டு வாரியத்தில் உள்ளவர்கள்தான் இதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் அதில் யாருமே விசாரணை செய்யப்படவில்லை. சிபிஐ அழைப்பை சிதம்பரம் எப்போதும் நிராகரித்ததில்லை. ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். அனைத்து கேள்விக்கும் ப. சிதம்பரம் இதுவரை பதில் சொல்லியுள்ளார் ஆதாரமே இல்லாமல் அவரை சிபிஐ தரப்பு கைது செய்துள்ளது" என பரபரப்பாக நீண்ட நேரம் வாதிட்டார்.
4மாதம் கழித்தே விசாரணை
இதைத்தொடர்ந்து சிதம்பரத்துக்காக வாதிட்ட அபிஷேக் மனு சிங்வி "ப. சிதம்பரத்தின் இடைக்கால முன் ஜமீனை 7 மாதம் கழித்து ரத்து செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே விசாரணை தொடங்கியது என்றும் அதன்பின்பே ப. சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்றும் வாதிட்டார். சிபிஐ மற்றும் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோரிடையே பரபரப்பான வாதம் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
சிபிஐ அழைத்து சென்றது
இந்த வாதத்திற்கு பிறகு தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிஐயின் கோரிக்கையை ஏற்று ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி அளித்தார். அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்துவிட்டார்.. இதனால் சிபிஐ அலுவலகத்துக்கு சிதம்பரம் கொண்டு செல்லப்பட்டார்.
|
சிறந்த பாடம்
இதனிடையே தனது தந்தையின் வழக்கினை அருகில் இருந்து கவனித்த கார்த்தி சிதம்பரம், இதுகுறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அபிஷேக் மனு சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோரின் வாதங்களை கேட்பது பாக்கியமான ஒன்று. சிறந்த பாடம். நீதிமன்றத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாதம் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக நீதிமன்ற விவாரங்கள் குறீத்து ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." என கூறியுள்ளார்.