பாஜகவுடன் தொடர்பு என குற்றச்சாட்டு- ராகுல் காந்தி விளக்கத்தால் ஆவேச ட்வீட்டை நீக்கிய கபில் சிபல்
டெல்லி: காங்கிரஸ் மேலிடத்துக்கு கடிதம் எழுதியதாலே மூத்த தலைவர்கள் பாஜகவினருடன் இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டுவதா? என கொந்தளித்த கபில் சிபல் இப்போது சமாதானமடைந்து ராகுல் காந்திக்கு எதிரான ட்வீட்டை நீக்கியுள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சி இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதம் விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் 23 தலைவர்களின் கடித விவகாரம் புயலைக் கிளப்பியது. இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, கடிதம் எழுதிய தலைவர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகின்றனர். சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைக்க போராடிய சூழ்நிலையில் இப்படி ஒரு கடிதம் அனுப்புவதா? என ஆவேசப்பட்டார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி பேச்சால் வெடித்தது மோதல்.. பதவி விலக தயார்.. கொந்தளிக்கும் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள்
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு புதிய பிரளயத்தை காங்கிரஸில் எழுப்பியுள்ளது. பாஜகவினருடன் தொடர்பு வைத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி நிரூபித்தால் பதவி விலக தயாராக இருக்கிறேன் என்றார் குலாம்நபி ஆசாத்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் ராகுலை கடுஐயாக சாடினார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் போராடி காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றினோம்; மணிப்பூரில் பாஜக அரசை வீழ்த்துவதற்காக உறுதுணையாக நின்றோம்; கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவுக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை; ஆனாலும் நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா? என கொதித்து போய் ட்விட்டரில் பதிவிட்டார் கபில் சிபல்.
அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது. பின்னர் சிறிது நேரத்திலேயே, என்னை ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை என தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். அதனால் என்னுடைய முந்தைய ட்வீட்டை திரும்பப் பெறுகிறேன் என பதிவிட்டுள்ளார் கபில் சிபல். அத்துடன் ராகுலை விமர்சித்த ட்வீட்டையும் கையோடு நீக்கிவிட்டார் கபில் சிபல்.