தமிழக எதிர்ப்புக்கு இடையே.. மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம்.. மோடியிடம் அனுமதி கேட்ட எடியூரப்பா
டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் வரத்து தடைபடும் என்பதால் தமிழக அரசும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்தது. இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த அணையை 67.16 டிஎம்சி கொள்ளளவில், ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் கட்டுவதாக கர்நாடகா தெரிவித்து இருந்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரில் எந்த தடங்கலும் இருக்காது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று டெல்லியில் சந்தித்தார். நவம்பர் 19-ம் தேதி பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டைக் காணொலியில் துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இனி பெரிய ரயில் நிலையங்களில்.. ரயில் ஏற போறீங்களா.. அதிர வைக்கும் ரயில்வேயின் திட்டம்!
மேலும், கர்நாடகத்தில் பாசனத் திட்டங்களான அப்பர் கிருஷ்ணா திட்டம்-3, அப்பர் பாத்ரா திட்டம் ஆகியவற்றுக்கு தேசிய அங்கீகாரம் கோரினார். இத்துடன், காவிரியின் குறுக்கே குடிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகதாது அணைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.