கர்நாடக அரசியல் பரபரப்பு உச்சகட்டம்.. நாளை மறுநாள் கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்!
டெல்லி: 9-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரம், கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் அரசியல் நிலவரம் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 39 இடங்களை பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், 3 மதசார்பற்ற ஜனதா தள எம் எல்ஏக்கள் உட்பட 11 பேர் ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்தனர்.
மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 11 எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகல்களை வழங்கியுள்ளனர். ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அட்சியை தக்க வைக்க, காங்கிரஸ் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கர்நாடக காங். எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையா எம்எல்ஏக்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளார். கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.