வழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்?
டெல்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி ராமமூர்த்தி தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் விரைவில் அவர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார் ராமமூர்த்தி. அதன் பின்னர் 2016-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்பியானார்.
பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் ராமமூர்த்தி. அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கர்நாடகா பாஜகவினர் மிகக் கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது ராஜினாமாவை வெங்கையா நாயுடுவும் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி விரைவில் பாஜகவில் ஐக்கியமாகலாம் எனவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் கட்சித் தாவல்கள் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன.