தீர்ப்பே வரவில்லை.. இடைத் தேர்தலா.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு
டெல்லி: கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கூட்டணியைச் சேர்ந்த இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இதில் அடக்கம்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. சூட்டோடு சூடாக 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்
தீர்ப்பு எப்போது?
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் காலியாக உள்ள 17ல், 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் வேகம்
இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ், அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி இல்லை என்று மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளதால், அந்த கட்சியும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து களம் இறங்கியுள்ளது. பாஜகவில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யவில்லை.
திரிசங்கு சொர்க்கம்
ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால், மக்கள் மத்தியில் பாஜக மீது கோபம் ஏற்படும், வெற்றி பெறுவது மிகவும் கடினம் என பாஜக நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் முதல்வர் எடியூரப்பா, தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளார். எனவே, வேட்பாளர் தேர்வில் கடும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கி விட்டால் அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்கலாம் என்று யோசிக்க முடியும். ஆனால் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வராத காரணத்தினால் 17 எம்எல்ஏக்களின் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல மாறிவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள். அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 18ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னமும் தீர்ப்பு வெளியாகவில்லை. எனவே தீர்ப்பு வெளியாகும் வரை இடைத் தேர்தலை நடத்தக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை
முன்னதாக, அக்டோபர் 21ஆம் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் அப்போது உச்சநீதிமன்றத்தில், தகுதி நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட, வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத் தேர்தலை டிசம்பர் 5ஆம் தேதிக்கு பின்னர் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.