இப்படியா தோற்பது.. கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு.. தலைவர், செயல் தலைவர் தப்பினர்
Recommended Video
டெல்லி: கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின், தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகிய பதவிகளை தவிர்த்து விட்டு, மொத்தமாக நிர்வாகத்தையே கலைத்துள்ளது, அக்கட்சித் தலைமை.
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் ஆட்சி செய்யும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, ஒன்றாக, களமிறங்கின. ஆனால், பெங்களூர் ஊரகம் தொகுதியை தவிர்த்து விட்டு பார்த்தால், எதிலுமே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, ஹாசன் தொகுதியை கைப்பற்றியது.
மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக வென்றது. மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவு அளித்த சுயேட்சை வேட்பாளர் சுமலதா அம்பரிஷ் வெற்றி பெற்றார்.
இவ்வாறு மாநிலத்தில் ஆளும் கூட்டணிக்கு மக்கள் மரண அடி கொடுத்ததால், காங்கிரஸ் தலைமை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில்தான், கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை, மொத்தமாக கலைப்பதற்கு இன்று அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கர்நாடகாவில் தற்போது உள்ள காங்கிரஸ் கமிட்டியை முற்றிலுமாக கலைப்பது என்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, முடிவு செய்துள்ளது. அதேநேரம், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் மட்டும் மாற்றப்படவில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவும், செயல் தலைவராக ஈஸ்வர் கண்ட்ரேவும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் தலைமை நேற்று இரவு மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. முன்னாள், அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பெங்களூர்-சிவாஜிநகர் எம்எல்ஏவுமான ரோஷன் பெய்க் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக ரோஷன் பெய்க் கருத்து தெரிவித்து வந்தார். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில், தொடர்ச்சியாக, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலரை விமர்சனம் செய்து வந்தவர்தான் ரோஷன் பெய்க். இந்த நிலையில்தான், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ரோஷன் பெய்க்கை சஸ்பெண்ட் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. மேலிடத்தின் இந்த நடவடிக்கைக்கு சித்தராமையாதான் காரணம் என்று ரோஷன் பெய்க் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.