ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லியில் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், டெல்லியிலுள்ள அமலாக்கப்பிரிவு, அதிகாரிகள் முன்னிலையில், கார்த்தி சிதம்பரம், விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு, அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம், அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த வருடம், சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை கைது செய்திருந்தது. அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பல முறை கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளது.
இதனிடையே, தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் விடுத்த கோரிக்கையை கடந்த மாதம், விசாரித்த உச்சநீதிமன்றம், நீங்கள் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சட்டத்தோடு விளையாடாதீர்கள் என எச்சரித்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு சரியாக ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சம்மனையடுத்து, காலை 11 மணியளவில் கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையின் டெல்லி, தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.