காஷ்மீர் பார்முலாவை வடகிழக்கில் நடைமுறைப்படுத்துவதா? லோக்சபாவில் காங். கண்டனம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பார்முலாவை வடகிழக்கில் மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதாக லோக்சபாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம், திரிபுராவில் போராட்டங்கள் தொடருகின்றன.
இதனை ஒடுக்கும் வகையில் துணை ராணுவப் படையினர் பல்லாயிரக்கணக்கானோர் அஸ்ஸாம், திரிபுராவில் குவிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தி தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இருப்பினும் போராட்டங்கள் அங்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று காலை லோக்சபா கூடியபோது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பினர். வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, ஜம்மு காஷ்மீர் போன்ற நிலைமை வடகிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளன.
இரு பிராந்தியங்களுமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட மத்திய அரசின் குடியுரிமை மசோதா நடவடிக்கையை நிராகரித்துள்ளார். காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட பார்முலாவை மத்திய அரசானது வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்துகிறது என சாடினார்.