காஷ்மீரில் அசாதாரண சூழல்.. எதற்கும் தயாராக இருங்கள்.. விமானப்படை.. ராணுவத்துக்கு மத்திய அரசு அலார்ட்
Recommended Video
டெல்லி: சிஆர்பிஎப் மற்றும் பிற துணை ராணுவப்படை வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு விரைவாக அனுப்புவதற்கு இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஸ்ரீநகர் முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 25 ஆயிரம் துணை ராணுவத்தினரை காஷ்மீருக்கு செல்லும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் எப்போதும் இல்லாத அளவுக்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக படைகளை அதிக அளவு குவித்து வருகிறது மத்திய அரசு. அமர்நாத் யாத்திரை பாதுகாபபுக்ககா படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனினும் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அங்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் அங்குள்ள கட்சிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காகவே படைகளை மத்திய அரசு குவித்து வருவதாக காஷமீரில் உள்ள கட்சிகள் நம்புகின்றன.
இந்நிலையில் காஷ்மீரில் சிஆர்பிஎப் மற்றும் பிற துணை ராணுவப்படை வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு விரைவாக அனுப்புவதற்கு சி -17 ஹெவி லிப்ட் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தினரை எதற்கும் தயாராக இருக்கும்படியும், மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.