எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
டெல்லி: எல்லை விவகாரத்தில் சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் பிரதேச எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் ஓய்ந்தபாடில்லை. இந்திய பிராந்தியத்துக்குள் கிராமம் அமைப்பது சாலை போடுவது என சீனா எல்லைமீறி வரும் சூழலில், இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு ஒரு போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி ஆற்றுப்படுகையை ஒட்டி சீனா 101 வீடுகள் கொண்ட கிராமத்தை கட்டமைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே சீனா இதேபோன்ற நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருவதாகவும் இதனை இந்திய அரசு கவனிக்கத் தவறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீனா இதேபோல் செயல்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் எல்லைப்பகுதியில் சீனாவின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இந்தியா தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா.. புட்டுப் புட்டு வைத்த சாட்டிலைட்!
இதனிடையே எல்லையில் உள்ளூர் மக்களுக்கு உதவும் வகையில் சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளதாகவும் அருணாச்சல பிரதேசம் மற்றும் அதன் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அரசு மிக உறுதியாக உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.