களம் இறங்கும் கமல்.. பிரச்சாரத்திற்காக வரும் கெஜ்ரிவால்.. கை கோர்க்கும் நாயகர்கள்!
Recommended Video
டெல்லி: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய வரவுள்ளாராம்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவரலாம் என்ற நிலையில் தமிழகத்தில் கூட்டணிகளும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டன. நாளையிலிருந்து முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரங்களும் ஆரம்பிக்க உள்ளது. நாளை தேசிய ஜனநாயக கூட்டணி தனது பிரச்சாரத்தை துவங்குகிறது. பிரதமர் மோடி வண்டலூரின் நாளை பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். இதில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வரும் 13 ம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவரையடுத்து சோனியாகாந்தி, பிரியங்கா ஆகியோரும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
என்னாச்சு ஸ்டாலினுக்கு.. போற போக்கை பார்த்தால் திமுகவுக்கு 22 சீட்தான் மிஞ்சும் போலயே!
கமல்ஹாசன்
இந்நிலையில் பிரதான கட்சிகளோடு கூட்டணியில் இல்லாத நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யமும் தேர்தலில் களம் காணுகிறது என்பதால் அவர்களும் தங்கள் கட்சிக்கு பிரச்சாரம் செய்ய ஒரு தேசிய முகம் இருப்பதை விரும்புகின்றனர். ஆகவே அவர்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கெஜ்ரிவால் பிரச்சாரம்
கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லி சென்ற கமல் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தது முதல் கேஜ்ரிவால் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்த சந்திப்பில் அதை நினைவு படுத்தியதோடு, இந்த தேர்தலில் தமிழகத்தில் எங்கள் கட்சிக்கு அவர்களின் ஆதரவை கோரியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கமல் எங்கள் கட்சியின் பிரச்சாரத்திற்கு முதல் குரல் கொடுத்தவரே அரவிந்த் கேஜ்ரிவால்தான். ஆகவே அவரை நேரம் கிடைக்கும்போது தமிழகம் வந்து எங்கள் கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக கமல் கூறியிருந்தார்.
தமிழகத்தில் ஆம் ஆத்மி
கடந்த நாடாளுமன்ற தேர்தலை பொருத்தமட்டில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா முழுவதும் பரவலாக போட்டியிட்டது. தமிழகத்திலும் 24 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டது ஆனால் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடப் போவதில்லை என்ற முடிவில் உள்ளனர்.
ஆம் ஆத்மியின் ஆதரவு
கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 -ம் தேதி சென்னைக்கு வந்த கேஜ்ரிவால் கமலை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் நீண்டகாலமாக கமலின் ரசிகர் என்றவர் ஊழலுக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுப்பதில்லை, ஒரு சிலரே குரல் கொடுக்கின்றனர் அதில் கமலும் ஒருவர் அவர் அரசியலுக்கு வரவேண்டும், நாட்டின் சூழ்நிலை குறித்தும் தமிழகத்தின் நிலை குறித்தும் இப்போது ஆலோசித்தோம் எதிர்காலத்திலும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறி சென்றார்.
கை கொடுக்கும் பிரச்சாரம்
இந்த பின்னணியில் கமல் தங்கள் கட்சிக்கு பிரச்சாரம் செய்ய கேஜ்ரிவாலை அழைத்துள்ளார். அவரும் வருவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள். இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் டெல்லியைத் தாண்டி பஞ்சாப், சண்டிகர் போன்ற மாநிலங்களில் செல்வாக்கை பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் போதிய தளம் இல்லை. ஆகவே கேஜ்ரிவாலும் தமிழகத்தில் கால் ஊன்ற கமலை பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆக, இருவரும் ஊழல் எதிர்ப்பு என்ற ஒரே தளத்தில் கை கோர்த்துக் களம் காணவுள்ளது ஊழல் எதிர்ப்பாளர்களுக்கும் மகிழ்ச்சிதான்.