தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களும் ஆதரவானவர்களும் டெல்லியில் மோதிக்கொண்ட சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியின் ஷாஹீன்பாக்கில் தொடர் போராட்டங்கள் நடந்த வருகிறது.
இதற்கிடையே, கடந்த 24ம் தேதி டெல்லியின் மாஜ்பூர் பகுதியிலும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது சிஏஏவுக்கு ஆதரவானவர்களும் அங்கு போராட்டம் நடத்த குவிந்தனர்
இதையடுத்து அங்கு இருதரப்பினர் இடையே வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர். ஆவார். இவருக்கு ஒரு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். தலைமை காவலர் ரத்தன் லாலை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு டெல்லி அரசு ஆறுதல் தெரிவித்துள்ளது.
கண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்
இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கிடையே பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், டெல்லி வன்முறையில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.