துவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்!!
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள தொண்டர்களை தேற்றும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று டெல்லியில் உள்ள பஞ்சாப் பாக் பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "லோக்சபா தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதேசமயத்தில், நேர்மையான கொள்கைகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவை நமது பெரும் பலம். அதிலிருந்து நாம் விலகவில்லை.
அரசியல் மற்றும் பொது வாழ்க்கைக்கு வரும்போது அவமானங்களை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் என்று அன்னா ஹசாரே என்னிடம் கூறியதை நினைவுப்படுத்த கடமைபட்டுள்ளேன். அவமானகரமான சூழ்நிலையை தாழ்மையுடன் ஏற்றுக் கொண்ட எனது ஆதரவாளர்களையும் பெருமையாக நினைக்கிறேன்.
2013ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி துவங்கியது முதல் நேர்மையாக நடந்து வருகிறோம். கட்சியின் மதிப்பை குலைக்காமல் செயல்பட்டு வருகிறோம் என்பதை பெருமையாக கூறுகிறேன்.
மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும்? லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக!
என் மீதும், துணைத் தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீதும் சிபிஐ ஊழல் வழக்குகளை பதிவு செய்து, வீடுகளில் பலமுறை ரெய்டு நடத்தியது. ஆனால், ஊழல் செய்த ஒரு பைசாவை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்களெல்லாம் இதற்கு பெருமைப்பட வேண்டும்.
நீங்கள் எல்லோரும் டெல்லி மக்களிடம் சென்று பெரிய தேர்தல் முடிந்துவிட்டது; வரும் சட்டசபை தேர்தலில் பெயரை பார்த்து வாக்களிக்காமல் வேலையை பார்த்து வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் போட்டியிட்ட 7 இடங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வியை சந்தித்துள்ளது ஆளும் ஆம் ஆத்மி கட்சி. இந்த தோல்வியால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக,தொண்டர்களை தேற்றும் முயற்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.