தேர்தலுக்காகவே டெல்லியில் இலவச மின்சார அறிவிப்பு.. கெஜ்ரிவால் மீது எதிர்கட்சிகள் புகார்
டெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் புதிய மின்சார கட்டண விவரங்களை டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.
இதில் சில பிரிவுகளில் கட்டண குறைப்பும், பிற பிரிவுகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டும் இருந்தது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், தலைநகர் டெல்லியில் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர், மின்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவித்தார்.
அதே போல 201 யூனிட் முதல் 401 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்றார். கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
விரைவில் டெல்லி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவே, இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டியுள்ளன.
திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி!
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரி, முதல்வரின் இலவச மின்கட்டண அறிவிப்பை வரவேற்பதாக கூறினார். அதே சமயம் தேர்தலை மனதில் வைத்து வாக்காளர்களிடம் நல்ல பெயரை எடுக்கவே செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்பதால், முழுவதுமாக வரவேற்க இயலவில்லை.
கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு என்பது தேர்தல் கால ஸ்டன்ட். கடந்த 56 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, டெல்லிக்கு ஒன்றுமே செய்யவில்லை என சாடினார்.
திவாரியின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அடிசி, பாஜக ஆளும் மாநில முதல்வர்களை போல அல்லாமல், டெல்லி முதல்வர் படித்த, நேர்மையான மற்றும் கொள்கைகளை புரிந்து கொள்ளும் திறனுள்ளவராக உள்ளார்.
அதனால் தான் மின்சார மானியம் டெல்லியில் சாத்தியமாகியுள்ளது. தேவைப்படின் பாஜக ஆளும் மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களுடன், தற்போது டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம் என பதிலடி கொடுத்துள்ளார்.