முல்லை பெரியாறில் புதிய அணை கட்டவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் கேரளா யூ டர்ன்!
டெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் கேரளா அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுகளில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகும், வீணாக புரளிகளை கிளப்பி அணை பாதுகாப்பு தொடர்பாக அவ நம்பிக்கைகளை கேரள அரசு எழுப்பி வருகிறது.
முல்லை பெரியாறு பகுதியில், புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைச் செய்து வருகிறது கேரள அரசு. இது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிரானது என்பதால், கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த மாதம் 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கையை கேரள அரசு தயார் செய்வதாக தமிழகம் புகார் செய்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் பதிலுக்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை.
மாற்று அணை அமைப்பதற்கான தகவலை மட்டுமே திரட்டி வருகிறோம் என்று தெரிவித்தது. கேரள அரசின் பதிலை ஏற்ற உச்சநீதிமன்றம் தகவல்களை திரட்ட அனுமதி அளித்துள்ளது.