தலித் என்பதால் என் மீது தாக்குதல்.. ராஜஸ்தான் பெண் எம்பி மீது கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் புகார்
டெல்லி: கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸை பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் ரம்யா கடிதம் அளித்துள்ளார்.
டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று முழுவதும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மதியம் அவை கூடியதும், அமித்ஷா பதவி விலக வலியுறுத்திய காங்கிரஸ் எம்பிக்கள் பதாகைகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை நோக்கி சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ரம்யா ஹரிதாஸை ராஜஸ்தான் மாநில பெண் எம்பி ஜாஸ்கவுர் மீனா தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
It is a matter of shame that Congress MP Ramya Haridas was physically assaulted inside the parliament by BJP MP Jaskaur Meena.
— Congress (@INCIndia) March 2, 2020
Sansad se sadak tak, BJP se Beti Bachao. pic.twitter.com/NLd5F04PJo
இதையடுத்து பாதிக்கப்பட்ட ரம்யா இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பிற்பகல் 3 மணிக்கு மக்களவையில் வைத்தே என்னை ஜாஸ்கவுர் தாக்கினார். நான் தலித் என்பதாலும் பெண் என்பதாலும் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளாகிறேன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கூறுகையில் காங்கிரஸ் எம்பி ரம்யா ஹரிதாஸ் பாஜக எம்பி ஜாஸ்கவுரால் நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்டது வெட்கமாக இருக்கிறது. நாடாளுமன்றம் முதல் நடுத்தெரு வரை பெண்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
இதுதொடர்பாக பாஜக எம்பி ஜாஸ்கவுருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவது ஒரு எம்பிக்கு அழகா என காங்கிரஸ் கண்டித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக எம்பி ஜோதிமணியும், கேரள எம்பி ரம்யா ஹரிதாஸும் அவைக் காவலர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரம்யா ஹரிதாஸ்.