பட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள் இவ்ளோதாங்க!
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சமர்பித்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
துறைவாரியாக எந்தெந்த துறைகளில் மிகுந்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன என்பது தொடர்பாக ஒரு சிறு விளக்கம் இதோ:
* தனிப்பட்ட நபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. இருப்பினும், பெரும் பணக்காரர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ .2.50 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 3% கூடுதல் வரி. ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுவோருக்கு கூடுதலாக 7 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
* ஆண்டுக்கு ரூ .1 கோடி ரொக்கமாக வங்கி கணக்கில் எடுத்தால், 2% டி.டி.எஸ். வரி உண்டு.
* மின்சார வாகனங்களுக்கான கடனுக்கான வரி சலுகை தரப்பட்டுள்ளது. ரூ .1.5 லட்சம் வரையிலான வட்டிக்கு வருமான வரி விலக்கு தரப்படும்.
* பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளின் மீதான கலால் வரி ரூ.1 உயர்த்தப்பட்டது
* ரூ .400 கோடி வரையில் வருவாய் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இனிமேல் வரி விகிதம் 25 சதவீதம்தான்.
* என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் தடையற்ற முதலீட்டை வழங்க ஏதுவாக, என்.ஆர்.ஐ போர்ட்ஃபோலியோ முதலீட்டு பிரிவு, இனிமேல் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு பிரிவுடன் இணைக்கப்படும். இது தவிர அவர்களுக்கு ஆதார் அட்டைகளும் வழங்கப்படும். 180 நாட்கள் காத்திருக்க தேவையில்லை. பாஸ்போர்ட்டுடன் இந்திய ஆதார் தரப்படும்.
* பிரதான் மந்திரம் கரம் யோகி மன் தன் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ .1.5 கோடிக்கும் குறைவான வர்த்தகம் கொண்ட 3 கோடி சில்லரை வணிகம் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படும்.
* சிறு குறு தொழில்களுக்கு 29 நிமிடங்களில் ரூ .1 கோடி வரை கடன்கள் கிடைக்கும். ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு நிறுவனங்களும் இந்த பலனை பெறலாம். இதற்காக இந்த, நிதியாண்டில் ரூ .350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும். இந்திய கல்வியை உலகின் மிகச் சிறந்த ஒன்றாக மாற்ற திட்டம். இந்தியா உயர்கல்வியின் மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 'இந்தியாவில் ஆய்வு' என்ற திட்டத்தைத் தொடங்குகிறோம் என அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது நமது உயர் கல்வியை கற்க, வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
* ரயில்வே உள்கட்டமைப்புக்கு 50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஒவ்வொரு சுய உதவிக்குழுவிலும் ஒரு பெண், முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை கடன் பெற முடியும்.
* 1.95 கோடி வீடுகளுக்கு மின்சாரம், எரிவாயு, கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ .70,000 கோடியை ஒதுக்குவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
* தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது