விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள்-மத்திய அரசு புகார்- அறிக்கை கேட்கும் சுப்ரீம்கோர்ட்
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதனை உறுதி செய்து விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது பிரச்சனைக்கு தீர்வு காண முழு அமைத்தல், டெல்லிக்குள் போராட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
இந்த விசாரணையில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் பிஎஸ் நரசிம்ஹா, சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இப்போராட்டத்துக்கு நிதி திரட்டுகிறது என குற்றம்சாட்டினார். இதை கேட்ட தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் அறிக்கையிலும் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், டெல்லி போராட்டங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார்.