காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகிய நடிகை குஷ்பு டெல்லி சென்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சி வர சிறப்பாக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச்செல்கிறார் பிரதமர் மோடி என்று பாஜகவில் இணைந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய குஷ்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை குஷ்பு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியில் அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சில காலம் மட்டுமே மாநில அரசியலில் ஈடுபட்ட குஷ்பு, சில ஆண்டுகள் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
பாஜக அரசுக்கு எதிராக ட்விட்டரில் பல பதிவுகளை பதிவிட்டு வந்தார் குஷ்பு என்றாலும் கட்சியில் குஷ்புவுக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்ற மனக்குறை இருந்து கொண்டுதான் இருந்தது. அதனை வெளிக்காட்டாமல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் குஷ்பு.
காங்கிரஸில் இருந்து விலகிய கையோடு.. பாஜகவில் ஐக்கியமானார் நடிகை குஷ்பு!
குஷ்புவிற்கு ஏமாற்றம்
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பினை எதிர்பார்த்தார். அதே போல லோக்சபா தேர்தலின் போதும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த குஷ்புவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
குஷ்புவிற்கு அங்கீகாரம் இல்லை
காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் இருந்தது. குஷ்பு அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அதனை கடுமையாக மறுத்து வந்தார் குஷ்பு.
குஷ்பு காட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்துவரும் நிலையில் அதற்கு குஷ்பு ஆதரவு தெரிவித்திருந்தார். அதனையடுத்து, அவர் பாஜகவில் இணைவார் என்று ட்விட்டரில் வேகமாக தகவல் பரவியது. அடுத்த சில நாட்களிலேயே பாஜகவிற்கு எதிரான ஆர்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு தான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக கூறினார் குஷ்பு. ட்விட்டரில் 2 ரூபாய் வாங்கிக்கொண்டு வதந்தி பரப்புவதாக காட்டமாக பதிவிட்டார் குஷ்பு.
பாஜகவில் இணைந்த குஷ்பு
திடீரென நேற்றிரவு தனது கணவர் சுந்தர் சி உடன் டெல்லி சென்ற குஷ்பு இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த குஷ்புவை வருக வருக என்று வரவேற்றார் தமிழக தலைவர் எல். முருகன். பாஜக மீதான நம்பிக்கையில் அனைவரும் பாஜகவில் இணைவதாகவும் தெரிவித்தார்.
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய குஷ்பு, ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறினார். தமிழகத்தில் பாஜக ஆட்சி வருவதற்கு தீவிரமாக பாடுபடுவேன் என்றும் கூறினார்.
கடுமையான விமர்சனம்
எதிர்கட்சியாக இருந்த போது என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். மாற்றம் என்பது மனித இயல்புதான். கட்சியில்தான் மாற்றமே தவிர கொள்கையில் ஒருபோதும் மாற்றமில்லை என்று கூறினார். எதிர்கட்சியாக இருந்த போது தன்னுடைய செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு ஆதரவாக இருந்ததாக கூறினார்.
ஊழல் இல்லை
பாஜக தலைவர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று கூறிய குஷ்பு, ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததால் தானும் பதிவிட்டதாக கூறினார். போக போகத்தான் எது நல்லது என்று தனக்கு தெரியவந்ததாக தெரிவித்தார் குஷ்பு.
பொறுத்திருந்து பாருங்கள்
காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய குஷ்பு, தான் எதிர்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை பாராட்டியிருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய செயல்பாடுகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் குஷ்பு.
தேர்தல் பிரச்சார பீரங்கி
குஷ்பு பாஜகவில் இணையவிருக்கும் தகவல் உறுதியானதால், அவரது பதவியை பறித்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் டெல்லிக்கு சென்ற குஷ்பு, சி.டி ரவி தலைமையில் பாஜகவில் இணைந்தார். ஏற்கனவே திமுகவில் இருந்து வந்த காங்கிரஸில் இணைந்த குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்திருப்பதால் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தல், தமிழக சட்டசபை தேர்தலில் பிரச்சார பீரங்கியாக குஷ்பு செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.