தமிழகம் குறித்துப் பேசியதற்காக வருத்தப்பட்டார் கிரண் பேடி.. சொல்கிறார் ராஜ்நாத் சிங்
டெல்லி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசிய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தன் கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசிய புதுவை துணை நிலை ஆளுநர் தமிழக மக்களையும், அரசையும் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியில் முதல் நகரமாக மாறியுள்ளது.
இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகு முறையும் கூட இதெற்கெல்லாம் காரணமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்களை வரலாறு தெரியாமல், சுயநலமிகள் என்றும் கோழைத்தனமான அணுகுமுறை கொண்டவர்கள் என்றும் விமர்சித்த கிரண்பேடி மீது தமிழக மக்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளும் கொதிப்படைந்தன.
தமிழக சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதிமுகவும் கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்திருந்தது.
புதுவையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். எதிர்ப்பு வலுத்ததையடுத்த கருத்து தெரிவித்த கிரண்பேடி, அது எனது சொந்த கருத்தல்ல மக்களின் கருத்து. அதை தான் நானும் பிரதிபலித்தேன் என கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மக்களவை திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுவை துணை நிலை ஆளுநர் கிரன்பேடியின் ட்விட்டர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக கூறினார்.
அதற்கு தண்ணீர் பிரச்சனை விவகாரத்தில் தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு, ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்தார் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.