தாய்லாந்துக்கு கை கொடுத்த "கிர்லோஸ்கர் பிரதர்ஸ்".. மேகாலயா சகோதரர்களை கைவிட்டது ஏனோ??
Recommended Video
டெல்லி: தாய்லாந்து குகை மீட்பும்,மேகாலயா குகை மீட்பும் மனதுக்கு பெரும் நெருடலைக் கொடுக்கின்றன. தாய்லாந்து குகை மீட்பில் இந்தியாவின் பங்கும் முக்கியமாக இருந்தது. ஆனால் மேகாலயா குகை மீட்பு விவகாரத்தில் இது மிகப் பெரிய அளவில் மிஸ் ஆகியுள்ளது.
இந்தியா என்று ஏன் சொல்கிறோம் என்றால்.. தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறார்களையும், கால்பந்து பயிற்சியாளரையும் மீட்கும் முயற்சிகளுக்கு இந்திய அரசு மிகப் பெரிய அளவில் உதவியது. இந்தியாவைச் சேர்ந்த கிர்லோஸ்கர் நிறுவனம் ராட்சச பம்புகளைக் கொடுத்து உதவியது.
ஆனால் மேகாலயாவில் சட்ட விரோத குகைக்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்கும் முயற்சியில் இந்த இரண்டு பேரையும் காணவில்லை. தாய்லாந்துக்கு ஓடி ஓடி உதவி செய்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம், மேகாலயா விவகாரத்தில் கப்சிப்பென இருக்கிறது. மத்திய அரசும் பெரிதாக அலட்டிக் கொண்டது போலத் தெரியவில்லை. இதுதான் சர்ச்சையாகியுள்ளது.
குகைக்குள் சிக்கிய 15 பேர்
மேகலயாவின் கிழக்கு ஜெய்ந்தியா மலைப் பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கத்திற்குள் சென்ற 15 பேர் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த 14 நாட்களாக அவர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. உயிருடன் இருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை. அவர்கள் சுரங்கத்திற்குள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
ராட்சத பம்ப் தேவை
அவர்கள் சிக்கியுள்ள சுரங்கத்திற்குள் அருகில் உள்ள ஆற்றிலிருந்து நீர் உள்ளே புகுந்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சுரங்கத்திற்குள் உள்ள நீரை அகற்றினால்தான் உள்ளே மீட்புப் படையினரை அனுப்ப முடியும். சுரங்கத்தின் ஆழம் கிட்டத்தட்ட 350 அடியாகும். அதில் தற்போது 75 அடி வரை தண்ணீர் உள்ளது. இதை 30 அடியாக குறைத்தால்தான் உள்ளே போக முடியும். இதற்கு ராட்சத பம்ப் தேவை.
கண்டு கொள்ளாத கிர்லோஸ்கர்
இத்தகைய ராட்சத பம்ப்புகள் கிர்லோஸ்கர் நிறுவனத்திடம்தான் உள்ளது. ஆனால் இதுவரை கிர்லோஸ்கர் எந்த உதவியும் செய்யவில்லை. இதுதொடர்பாக மேகாலயா அரசு மத்திய அரசிடம் ராட்சத பம்ப்புளை அனுப்பக் கோரியும் இதுவரை வரவில்லை. மத்திய அரசும் மெளனமாக இருக்கிறது. மேகாலயா அரசு தனியாக போராடிக் கொண்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் கன்ராட் சங்மா கூறியுள்ளார்.
தாய் மீட்பும் - மேகாலயா அவலமும்
இந்த நேரத்தில் நமக்கு தாய்லாந்து மீட்புப் பணி நினைவுக்கு வருகிறது. தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 கால்பந்து சிறார்களையும், அவர்களது பயிற்சியாளரையும் அந்த நாட்டு அரசு மிக மிக சாதுரியமாக திட்டமிட்டு துரிதமாக மீட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அப்படி ஒரு மெனக்கெடலை அது கொடுத்தது. அந்த சமயத்தில் தாய்லாந்து அரசுக்கு இந்திய அரசும் மிக மிக உறுதுணையாக இருந்தது. அதிலும் கிர்லோஸ்கரின் பங்கு மிகப் பெரியது.
ஏன் இப்படி நடக்கிறது கிர்லோஸ்கர்
பெரிய பெரிய நீரிறைக்கும் பம்புகளைக் கொடுத்ததோடு நில்லாமல் அதை இயக்குவதற்கும் ஏராளமானவர்களைக் கொடுத்து உதவியது கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம். இதனால்தான் மீட்புப் பணிகள் வெற்றிகரமாக முடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதற்காக தாய்லாந்து அரசு இந்திய அரசுக்கும், தூதரகத்திற்கும், கிர்லோஸ்கருக்கும் நன்றி கூறியிருந்தது. ஆனால் சொந்த சகோதரர்கள் 15 பேரை மீட்கும் விவகாரத்தில் கிர்லோஸ்கர் நிறுவனம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா டூ தாய்லாந்துக்கு விமானம்
என்ன கொடுமை என்றால் தாய்லாந்துக்குத் தேவையான நான்கு அதி சக்தி பம்ப்புளை மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் கிர்லோஸ்கர் நிறுவனம் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் புனேவில்தான் உள்ளது. ஆனால் இந்தா இருக்கிற மேகலாயா பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் கிர்லோஸ்கர் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
போராடும் மேகாலயா
மேகாலயா அரசு தற்போது பயன்படுத்தி வருவது குறைந்த சக்தி கொண்ட 10 பம்ப்புகளைத்தான். இவற்றால் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. 100 குதிரை சக்தி திறன் கொண்ட ராட்ச பம்ப்புள் தேவை. குறைந்தது 10 பம்ப்புகள் இருந்தால்தான் தண்ணீரை முழுமையாக வாரியிறைக்க முடியுமாம். இதைக் கொடுக்கத்தான் மத்திய அரசுக்கும் கிர்லோஸ்கருக்கும் மேகலாயா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை பம்ப்புகள் வரவில்லை.
பெரும் கொடுமை
தாய்லாந்தில் 14வது நாளில் சிறார்களை அடையாளம் கண்டு மீட்புப் பணிகளை தொடங்கினர். 3 நாளில் முடித்தனர். அதாவது 17வது நாளில் முடிந்தது. ஆனால் மேகாலயா விவகாரத்தில் 14 நாட்களாகியும் இதுவரை யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்புப் பணி எப்போது தொடங்கும் என்றும் தெரியவில்லை. தாய்லாந்தைப் பொறுத்தமட்டில் உள்ளே எங்கு சிக்கியிருக்கின்றனர் என்பது முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் மேகலாயா விவகாரத்தில் இதுவரை யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமாக உள்ளது.
ஆட்கள் எங்கே
தாய்லாந்து விவகாரத்தில் நாடே பதறியது, பிரார்த்தித்தது, ஒன்று திரண்டது, அரசுகள் கை கோர்த்து செயல்பட்டன. ஆனால் மேகாலயா விவகாரத்தில் யாரும் அதைப் பற்றி கவலையே படாமல் அவரவர் வேலையில் மும்முரமாக உள்ளனர். சொந்த சகோதரர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாராமுகம்.. இந்தியாவுக்கு இது பெருத்த அவமானமில்லையா.. உரியவர்கள் உணர்ந்து, குறிப்பாக மத்திய அரசும், கிர்லோஸ்கர் நிறுவனமும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் இறங்க வேண்டும் என்பதே பதறிப் போயுள்ள மக்களின் மன நிலை.