கொடநாடு கொலை.. முதல்வர் பழனிச்சாமி மீது மேத்யூஸ் மீண்டும் பரபர குற்றச்சாட்டு!
கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி மீது தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
டெல்லி: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி மீது தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவரை கைது செய்ய தமிழக போலீஸ் முயன்று வருவதாக தகவல்கள் வருகிறது.
இந்த நிலையில் மேத்யூஸ் சாமுவேல் பேட்டி அளித்தார். தான் வெளியிட்ட ஆவணங்கள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.
பெரிய விஷயம்
அதில், இதுவரை என்னை தேடி போலீஸ் யாரும் வரவில்லை. ஆனால் போலீஸ் என்னை தேடுவது எனக்கு தெரியும். என் வீட்டை சோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக பெரிய விஷயம் ஒன்று வெளியே வர போகிறது. அது எல்லோருக்கும் தெரியும். அது தமிழக அரசுக்கும் கூட தெரியும்.
யார் கொலையாளி
தமிழக முதல்வர் பழனிச்சாமிதான் கொலையாளி என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன். 5 கொலைகளை அவர் செய்துள்ளார் என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்திய வரலாற்றில் முதல்முறை முதல்வர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.
எல்லோருக்கும் சிறை
என்னுடைய பத்திரிகை துறை வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள். நான் யாரை பற்றியும் தவறாக குற்றஞ்சாட்டியது இல்லை. நான் குற்றஞ்சாட்டிய எல்லோரும் சிறை சென்று இருக்கிறார்கள். ஒருவர் கூட வெளியே வந்தது கிடையாது.
பழனிசாமி
இந்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியே இருக்கிறார். அடுத்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார். நான் அவரை சிறையில் சென்று சந்திப்பேன். கோர்ட்டிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. நான் தண்டனை வாங்கி கொடுப்பேன்.
அச்சமில்லை
இது பத்திரிகை துறை, நான் பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படி செய்கிறேன். என்னை கைது செய்யட்டும். நான் அச்சப்பட மாட்டேன். ஆனால் உண்மை வெளியே வரும். என்னை கைது செய்தால் முறைப்படி கைது செய்யட்டும்.
குரல்
சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். கொஞ்ச பொறுத்திருங்கள் உண்மை வரட்டும். உண்மை வரும்வரை காத்திருங்கள். எத்தனை நாட்கள் ஆனாலும், எத்தனை வருடம் ஆனாலும் உண்மை வரும். என் குரலை ஒடுக்க முடியாது என்று மேத்யூஸ் கூறியுள்ளார்.