தமிழக போலீஸ் என்னை தேடி டெல்லி வந்துள்ளது.. கொடநாடு வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் பரபர போஸ்ட்!
தமிழக போலீஸ் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழக போலீஸ் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் மரணங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக முக்கியமாக ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.
இது பெரிய புயலை கிளப்பியது. இந்த நிலையில் மேத்யூஸ் சாமுவேல் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவரை கைது செய்ய தமிழக போலீஸ் டெல்லி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தற்போது மேத்யூஸ் சாமுவேல் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்கில் பரபர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், டெல்லி மற்றும் சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலர், தமிழ்நாடு போலீஸ் என்னை கைது செய்ய டெல்லி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். என்னுடைய வீட்டை அவர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் கேவி சயன், வலயர் மனோஜ் ஆகியோரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
எனக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது, என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பெரிய வைரலாகி உள்ளது.