கோடநாடு விவகாரத்தில் மற்றொரு திருப்பம்.. சயான், மனோஜ் கடத்தப்பட்டனர்.. மேத்யூஸ் குற்றச்சாட்டு
டெல்லி: கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த சயன் மற்றும் மனோஜ் இருவரும் போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்றும், கடத்தப்பட்டனர் என்றும் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் பரபரப்பு பேட்டியை வெளியிட்டுள்ளார்.
கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் அதன் பிறகு நடைபெற்ற மர்ம சாவுகள் தொடர்பாக சந்தேகம் கிளப்பும் வகையில் ஒரு ஆவண படத்தை மேத்யூஸ் சில தினங்கள் முன்பாக வெளியிட்டார்.
இந்த நிலையில், அதிமுக ஐடி பிரிவு சார்பில் மேத்யூஸ் மற்றும் அந்த ஆவணப் படத்தில் பேட்டியளித்த சயன், மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் அதிமுக ஐடி பிரிவு புகார் அளித்தது.
கைது செய்ததாக தகவல்
இதையடுத்து, வீடியோ தொடர்பானவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த புகாரின் பேரில், சயான் மற்றும் மனோஜ் இருவரும், டெல்லியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதை மேத்யூஸ் மறுத்துள்ளார்.
வலுக்கட்டாயம்
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு தனியார் வண்டியில், சயான் மற்றும் மனோஜ் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டனர். வலுக்கட்டாயமாக அவர்கள் வாகனத்திற்குள் தள்ளி கொண்டு செல்லப்பட்டனர். எப்படி அவர்கள் கடத்தலாம்? இது மிக சீரியசான விஷயம். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்தான் இந்த கடத்தலுக்கு காரணம். இவ்வாறு மேத்யூஸ் தெரிவித்தார்.
வீடியோ
இதுதொடர்பாக மேத்யூஸ் ஒரு குறும் வீடியோவை வெளியிட்டு பேசியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும், கேள்வி கேட்கப்பட வேண்டும் என்று, மேத்யூஸ் அதில் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்
இதனிடையே, கோடநாடு விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்க ஆரம்பித்துள்ளன. திமுக மட்டுமின்றி, பிற எதிர்க்கட்சிகளும் விசாரணை நடத்த கோரிக்கைவிடுத்துள்ளன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.