எந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா
டெல்லி: எல்லோரும் ஒரு வழியில் போனால் கொடிக்குணில் சுரேஷ் மட்டும் இன்னொரு வழியில் போவார் என சத்தியமாக சோனியா காந்தி எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால்தான் அவர் வழக்கத்திற்கு விரோதமாக கடிந்து கொண்டு பேசி விட்டார்.
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் நேற்று முன்தினமும், நேற்றும் பதவியேற்றுக் கொண்டனர். முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். அதையடுத்து பிற எம்பிக்களும் வரிசையாக பதவியேற்றனர்.
நேற்று தமிழ்நாடு, கேரளா எம்பிக்கள் பதவியேற்றனர். அதில் தமிழக எம்பிக்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல தமிழிலேயே பதவியேற்றனர். அதேபோல புதுச்சேரி எம்பியாக தேர்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கமும் தமிழிலேயே பதவியேற்றார். ஆனால் நேற்று கேரள எம்பி ஒருவரால் சிறிது சலசலப்பு ஏற்பட்டு விட்டது.
சலசலப்பு
அவர்தான் கொடிக்குணில் சுரேஷ் காங்கிரஸ் எம்பியாவார். இவர் நேற்று பதவியேற்க அழைக்கப்பட்டபோது மலையாளம் அல்லது ஆங்கிலத்தில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுரேஷ் இந்தியில் பதவியேற்றபோது கேரள மற்றும் காங்கிரஸ் எம்பிக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மாறாக பாஜக தரப்பில் மேசைகளைத் தட்டி வரவேற்பு கொடுத்தனர்.
ராகுல்காந்தி
அதை விட முக்கியமாக கேரள காங்கிரஸ் எம்பிக்களை மலையாளத்திலேயே பதவியேற்குமாறு சோனியா காந்தி முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்தாராம். கேரளாவிலிருந்துதான் ராகுல் காந்தியும் வயநாடு தொகுதி எம்பியாக தேர்வாகியுள்ளார். ஆனால் சுரேஷ் இந்தியில் பதவியேற்றதால் சோனியா காந்தி அப்செட் ஆகி விட்டாராம். அதை விட முக்கியமாக பதவியேற்ற பின்னர் சுரேஷ் பிரதமர் மோடிக்கு பெரிய வணக்கம் வைத்ததும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
தாய்மொழி
பதவியேற்புக்குப் பின்னர் சோனியாவை சுரேஷ் சந்தித்தபோது ஏன் இந்தியில் பதவியேற்றீர்கள். மலையாளத்தில்தானே பதவியேற்க கூறியிருந்தேன். உங்களது தாய்மொழி உங்களுக்கு முக்கியமில்லையா என்று கடுமையாகவே கேட்டாராம் சோனியா காந்தி. இந்த விவகாரம் குறித்து பின்னர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏன் இந்தியில் பதவியேற்றீர்கள் என்று சோனியா காந்தி கேட்டார். கடந்த முறை ஆங்கிலத்தில் பதவியேற்றேன். இந்த முறை இந்தியில் பதவியேற்றேன் " என்று அவரிடம் விளக்கினேன் என்றார்.
ஆங்கிலம்
வயநாடு காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பதவியேற்றார். அதேபோல இளம் எம்பியான ரம்யா ஹரிதாஸும் ஆங்கிலத்திலேயே பதவியேற்றார். மற்ற காங்கிரஸ் எம்பிக்களில் சிலர் மலையாளத்திலும், மற்றவர்கள் ஆங்கிலத்திலும் பதவியேற்றனர். கொடிக்குணில் சுரேஷ் 7வது முறையாக லோக்சபாவுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.